திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ் 

திருத்தந்தையின் 2021ம் ஆண்டு செபக்கருத்துக்கள்

1844ம் ஆண்டு, இயேசு சபையினரால் துவக்கப்பட்ட செபத்தின் திருத்தூதுப் பணி, தற்போது 98 நாடுகளில், 3 கோடியே 50 இலட்சத்திற்கும் அதிகமானோருக்குப் பணியாற்றி வருகிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2021ம் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் செபிக்க விரும்பும் கருத்துக்களை, பிப்ரவரி 13, இவ்வியாழன் மாலையில் வெளியிட்டுள்ளது, இயேசு சபையினரின் திருத்தூது செப வலைத்தள அமைப்பு.

2021ம் ஆண்டில், நற்செய்தி அறிவிப்பு அல்லது, உலகளாவிய ஒரு கருத்துக்காகச் செபிக்க அழைக்கும்  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2021ம் ஆண்டு சனவரி மாதத்தில் மனித உடன்பிறந்த நிலைக்காகச் செபிக்க அழைப்பு விடுத்துள்ளார்.

மற்ற மதங்களின் சகோதரர் சகோதரிகளுடன் முழுமையான உடன்பிறந்த உணர்வில் வாழவும், நாம் ஒருவர் ஒருவருக்காகச் செபிக்கவும் ஆண்டவரிடம் அருளை மன்றாடுவோம் என, சனவரி மாதத்தில் செபிக்க அழைப்பு விடுக்கும் திருத்தந்தை, பிப்ரவரி மாதத்தில், வன்முறையை எதிர்நோக்கும் பெண்களுக்காகச் செபிக்குமாறு கூறியுள்ளார்.  

மார்ச் மாதத்தில், கடவுளின் எல்லையில்லா இரக்கத்தைச் சுவைப்பதற்கென, ஒப்புரவு அருளடையாளத்தை வாழுமாறும், ஏப்ரல் மாதத்தில், சர்வாதிகாரப் போக்குகள், ஏன் சனநாயகம் நெருக்கடியிலுள்ள இடங்களில்கூட, அடிப்படை உரிமைகளுக்காக, தங்கள் வாழ்வு அச்சுறுத்தப்படுவதை எதிர்கொள்ளும் மக்களுக்காகச் செபிப்போம் எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.

நிதி உலகிற்காக, திருமணத்தின் அழகு போற்றப்படும்படியாக, சமுதாய நட்புக்காக, திருஅவைக்காக, சூழலியல் உணர்வுள்ள ஒரு வாழ்வு அமைக்கப்படும்படியாக, தூதுரை மறைப்பணியாளர்களுக்காக, மனத்தளர்ச்சியால் துன்புறுவோர்க்காக, மறைக்கல்வி ஆசிரியர்களுக்காக.. என்று, மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் நாம் செபிக்க வேண்டுமென திருத்தந்தை விரும்புகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செபத்தின் திருத்தூதுப் பணி

செபத்தின் திருத்தூதுப் பணி என்ற பெயரில், இயேசு சபையினர் நடத்திவரும் ஓர் அமைப்பு, ஒவ்வொரு மாதமும் திருத்தந்தை, விசுவாசிகளுடன் பகிர்ந்துகொள்ளும் செபக்கருத்துக்களை, 'The Pope Video' என்ற காணொளி வடிவில் YouTube வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறது.

1844ம் ஆண்டு, இயேசு சபையினரால் துவக்கப்பட்ட செபத்தின் திருத்தூதுப் பணி, தற்போது 98 நாடுகளில், 3 கோடியே 50 இலட்சத்திற்கும் அதிகமானோருக்குப் பணியாற்றி வருகிறது என்று, இந்த அமைப்பின் உலக ஒருங்கிணைப்பாளர், அருள்பணி Frédéric Fornos அவர்கள் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 February 2020, 15:05