உலகின் உப்பாகவும் ஒளியாகவும் செயல்படும் அமைப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்
திருப்பீடத்தின் மறைப்பணிகள் தொடர்புடைய பிறரன்பு நடவடிக்கைகளுக்கு பொருளாதார, மற்றும், ஆன்மீக ஒத்துழைப்பை வழங்கும் Pro Petri Sede என்ற அமைப்பின் அங்கத்தினர்களை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து தன் பாராட்டுக்களை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எவ்வித பாகுபாடுமின்றி, அனைத்து மனிதகுல பாதுகாப்பிற்கும், மனித மாண்பு மேம்பாட்டிற்கும் உழைத்துவரும் இவ்வமைப்பு, முதியோர், மற்றும், கருவில் வளரும் குழந்தைகள் ஆகியோரைப் பாதுகாப்பதில் எடுத்துவரும் சிறப்பு நடவடிக்கைகளைப் பாராட்டினார் திருத்தந்தை.
பலருக்கும் வாழ்வில் சுவையூட்டும் Pro Petri Sede அமைப்பு, தன் பிறரன்பு நடவடிக்கைகள் வழியாக, உலகின் உப்பாகவும் ஒளியாகவும் செயல்படுகிறது என்ற பாராட்டையும் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய உலகில் போராலும், மக்கள் குடிபெயர்வுகளாலும், ஏழ்மை, சுற்றுச்சூழல் போன்றவைகளாலும் உருவாகும் சவால்களை எதிர்கொள்வதில், தன்னுடன் இணைந்து, இவ்வமைப்பு பணியாற்றுவது குறித்து மகிழ்ச்சியை வெளியிட்டார்.
சுயநலம், பாராமுகம் என்பவை மனிதர்களிடையேயும், சுற்றுச்சூழலிலும் அமைதிக்கு அச்சுறுத்தலைக் கொணர்கின்றன என்பதால், அவைகளுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்