பன்னாட்டு கண்காட்சிகளை உருவாக்கும் தொழில் நிறுவனங்களின் கழக (UFI) உறுப்பினர்களுடன் திருத்தந்தை பன்னாட்டு கண்காட்சிகளை உருவாக்கும் தொழில் நிறுவனங்களின் கழக (UFI) உறுப்பினர்களுடன் திருத்தந்தை 

UFI உலகப் பிரதிநிதிகளைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ்

மனித உழைப்பு, கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் பொருள்கள், அங்கு பயன்படுத்தப்படும் ஒளி விளக்குகள், என்று பல்வேறு அம்சங்கள் ஒன்றிணைந்து வரும்போது, கண்காட்சிகள் உருவாகின்றன – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கலாச்சாரம் மற்றும் மத நம்பிக்கை ஆகியவற்றின் உறைவிடமாகத் திகழும் உரோம் நகரில், பன்னாட்டு கண்காட்சிகளை உருவாக்கும் தொழில் நிறுவனங்களின் கழகம் (UFI) நடத்தும் உலக உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள வந்திருக்கும் பிரதிநிதிகளை வாழ்த்துவதில் தான் மகிழ்ச்சி கொள்வதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

UFI என்றழைக்கப்படும் இக்கழகம், சனவரி 5, இப்புதன் முதல், 7, இவ்வெள்ளி முடிய உரோம் நகரில் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த உலகப் பிரதிநிதிகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, சனவரி 6, இவ்வியாழன் மதியம், திருப்பீடத்தில் சந்தித்தனர்.

மனிதாபிமானமும், நீதியும் நிறைந்த சமுதாயம்

UFI உலகப் பிரதிநிதிகளை வாழ்த்திப் பேசியத் திருத்தந்தை, மனித இனம் மேற்கொள்ளும் பல்வேறு செயல்பாடுகள் ஒன்றோடொன்று தொடர்புடையன என்பதைக் குறிப்பிட்டு, UFI நிறுவனத்தின் செயல்பாடுகள், மனிதாபிமானமும், நீதியும் நிறைந்த சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பன்னாட்டளவில் உருவாக்கப்படும் கண்காட்சிகள், மக்களிடையே, சந்திப்பு கலாச்சாரத்தை வளர்க்கிறது என்பதை தன் உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, நாடுகளின் எல்லை, கலாச்சாரம், மதம் என்ற பல்வேறு வரையறைகளைக் கடந்து, சந்திப்புகள் நிகழ்வதற்கு, UFI நிறுவனம், ஒரு கருவியாக விளங்குகிறது என்று எடுத்துரைத்தார்.

கண்காட்சிகளை உருவாக்க, பல்வேறு அம்சங்கள்

மனித உழைப்பு, கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் பொருள்கள், அங்கு பயன்படுத்தப்படும் ஒளி விளக்குகள், என்று பல்வேறு அம்சங்கள் ஒன்றிணைந்து வரும்போது, கண்காட்சிகள் உருவாகின்றன என்பதை தன் உரையில் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதேவண்ணம், மனித சமுதாயத்திலும், பல்வேறு அம்சங்கள் இணைந்து வருவதற்கு நாம் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 February 2020, 14:48