பஹ்ரைன் வாரிசுரிமை இளவரசர் திருத்தந்தையுடன் சந்திப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்
பஹ்ரைன் நாட்டின் வாரிசுரிமை இளவரசர் Salman bin Hamad al Khalifa அவர்கள், இத்திங்களன்று காலை, திருப்பீடத்தில், திருத்தந்தையை சந்தித்து 20 நிமிடங்கள் உரையாடினார்.
திருத்தந்தையர்களின் நூலக அறையில் இடம்பெற்ற இச்சந்திப்பில், பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த 5 உயர்மட்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவும் பங்கேற்றது. இச்சந்திப்பின்போது, பல்வேறு காலநிலைகளைக் குறிக்கும் உருவகங்கள் பொறிக்கப்பட்ட ஒரு மரப்பெட்டியை பஹ்ரைன் இளவரசர் திருத்தந்தைக்கு பரிசளிக்க, திருத்தந்தையும்,
'பாலைவனம் பூந்தோட்டமாக மாறும்' என இலத்தீனில் பொறிக்கப்பட்ட பதக்கம் ஒன்றை, இளவரசருக்கு பரிசளித்தார்.
அபுதாபியில் Al-Azhar இஸ்லாமிய தலைமைக்குருவுடன் தான் கையெழுத்திட்ட ஏடு குறித்தும், இச்சந்திப்பின்போது நினைவுக்கூர்ந்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
உலக அமைதிக்கு மனித உடன்பிறந்த நிலை என்ற ஏடு, கடந்த ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி திருத்தந்தையின் அபுதாபி திருப்பயணத்தின்போது, Al-Azhar இஸ்லாமிய தலைமைக்குரு Sheikh Ahmed el-Tayeb அவர்களாலும் திருத்தந்தையாலும் இணைந்து கையெழுத்திடப்பட்டது.
இதன் ஓராண்டு நினைவையொட்டி, அரபு அமீரகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில், திருப்பீடத்தின் சார்பில், திருப்பீட தகவல் தொடர்புத்துறைத் தலைவர் பவுலோ ருஃபீனி அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்