மூவேளை செப உரை 120120 மூவேளை செப உரை 120120 

தாழ்ச்சியும் எளிமையும், இயேசுவின் சீடரிடம் எதிர்பார்ப்பு

திருத்தந்தை : இயேசு, முற்றிலுமாக இறைவன் பக்கம் நின்றதுபோல், முற்றிலும் மனிதகுலத்தின் பக்கமும் நின்றார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இறைவன், தன் குழந்தைகளுக்குரிய, எல்லைகளற்ற அன்பை எடுத்துரைப்பதும், அதற்கு சாட்சி பகர்வதும் எவ்விதம் என்பதை, தன் செயல்பாடுகள் வழியாக காட்டியவர் இயேசு என, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் திருமுழுக்கு திருவிழாவான இஞ்ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த 20,000த்திற்கும் மேற்பட்டோருக்கு, நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'இறைத்திட்டத்தை எவ்வாறு நிறைவேற்றவேண்டும் என்பதை, மகனுக்குரிய கீழ்ப்படிதலுடனும், எளிமையுடனும், தாழ்ச்சியுடனும் நிறைவேற்றிக் காட்டியவர் இயேசு, என எடுத்துரைத்தார்.

இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையேயுள்ள இடைவெளியை சரிசெய்ய வந்த இயேசு, முற்றிலுமாக, இறைவன் பக்கம் நின்றதுபோல், முற்றிலும், மனிதகுலம் பக்கமும் நின்றார், என்று கூறினார் திருத்தந்தை.

புனித திருமுழுக்கு யோவானை நோக்கி, 'கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை’ என இயேசு கூறியது, மகனுக்குரிய கீழ்ப்படிதலுடனும், மனிதகுலத்துடன் ஒருமைப்பாட்டுணர்விலும் இறைத்திட்டத்தை நிறைவேற்றுவதைக் குறித்து நிற்கிறது, என்றார் திருத்தந்தை.

தாழ்ச்சியுடனும், எளிமையுடனும் செயல்படும் போக்கு என்பது, இன்றைய உலகப்போக்குகளுக்கு எதிரானது என்றுரைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதுவே, இயேசுவின் சீடர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது என மேலும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 January 2020, 12:30