பிப்ரவரி 4ம் தேதி ‘மனித உடன்பிறந்த நிலை உலக நாளாக’...
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 4ம் தேதியை, ‘மனித உடன்பிறந்த நிலை உலக நாளாக’, ஐ.நா.அவை சிறப்பிக்க வேண்டுமென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், அல்-அசார் இஸ்லாமிய தலைமை குரு, Ahmed Al-Tayyeb அவர்களும், விண்ணப்பித்துள்ளனர்.
இவ்வாண்டு பிப்ரவரி 4ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், அல்-அசார் இஸ்லாமிய தலைமை குரு, Ahmed Al-Tayyeb அவர்களும் இணைந்து, அபுதாபியில், “உலக அமைதிக்கும், ஒன்றிணைந்து வாழ்வதற்கும், மனித உடன்பிறந்த நிலை” என்ற தலைப்பில், வரலாற்று சிறப்புமிக்க ஆவணம் ஒன்றில் கையெழுத்திட்டனர்.
இந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை நடைமுறைப்படுத்தும் நோக்கத்துடன், கிறிஸ்தவ, இஸ்லாமிய மற்றும் யூத மதங்களின் பிரதிநிதிகள் அடங்கிய ஓர் உயர்நிலை அவை, இவ்வாண்டு, ஆகஸ்ட் 20ம் தேதி உருவாக்கப்பட்டது.
இந்த அவையின் தலைவராகப் பணியாற்றும், பல்சமய திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Ayuso Guixot அவர்களும், இஸ்லாமிய மதத்தின் சார்பில், நீதிபதி Muhammad Abd al-Salam அவர்களும், ஐ.நா.அவைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்களை, டிசம்பர் 5 இவ்வியாழனன்று சந்தித்து, ‘மனித உடன்பிறந்த நிலை உலக நாளை’க்குறித்த விண்ணப்பத்தை அளித்தனர்.
திருத்தந்தையும், அல்-அசார் தலைமை குருவும் அளித்துள்ள இந்த பரிந்துரையை நடைமுறைப்படுத்த கூட்டேரஸ் அவர்கள் ஒப்புதல் அளித்ததோடு, ஐ.நா.வின் உயர் மட்ட அதிகாரி, முனைவர் Adama Dieng அவர்களை, இந்த பரிந்துரையின் தொடர் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாளராக நியமித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்