தேடுதல்

மூவேளை செப உரை 221219 மூவேளை செப உரை 221219 

இத்தாலியில் மாசுக்கேடுகளால் துன்புறுவோர் சார்பாக...

இத்தாலி நாட்டின் ஒரு சில பகுதிகளில் நிலவும் காற்று மாசுக்கேட்டை நீக்க, அரசு அதிகாரிகள், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் – திருத்தந்தையின் விண்ணப்பம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

டிசம்பர் 22, இஞ்ஞாயிறன்று, நண்பகல் வேளையில், வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில், மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு தன் சிறப்பான வாழ்த்துக்களைக் கூறினார்.

மாசுக்கேடுகளால் பாதிக்கப்பட்டோர் சார்பாக...

இத்தாலி நாட்டின் ஒரு சில பகுதிகளில் நிலவும் சுற்றுச்சூழல் மாசுக்கேடுகளால் பாதிக்கப்பட்டோரின் சார்பாக வந்திருந்த பிரதிநிதிகள் குழுவை குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, அப்பகுதிகளில் நிலவும் காற்று மாசுக்கேட்டை நீக்க, அரசு அதிகாரிகள், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், காற்று மாசுக்கேட்டினால், அப்பகுதிகளில், தங்கள் உடல் நலனை இழந்துள்ளோருக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்படவேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விண்ணப்பித்தார்.

இன்னும் மூன்று நாள்களில் கிறிஸ்மஸ்

இன்னும் மூன்று நாள்களில் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவைக் கொண்டாடுவோம். என்பதை தன் உரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை, இவ்விழாவையொட்டி, வெகு தூரங்களிலிருந்து குடும்பமாகக் கூடிவருவதற்கு முயற்சிகள் மேற்கொள்வோரை தனிப்பட்ட முறையில் பாராட்டினார்.

கிறிஸ்து பிறப்பு பெருவிழா, நமக்குள் உடன்பிறந்த உணர்வை வளர்க்கும் நேரமாகவும், தேவையில் இருப்போருடன் ஒருங்கிணையும் விழாவாகவும் அமைய, தான் வாழ்த்துவதாகக் கூறி, வளாகத்தில் கூடியிருந்த அனைவருக்கும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் ஆசீரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 December 2019, 12:49