சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தலைமுறை தேவை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
இத்தாலி, பொலிவியா, கொலம்பியா, குவாத்தமாலா, பெரு ஆகிய நாடுகளில் இளையோரின் கல்வித்திட்டத்திற்கு உதவிவரும், 'வாழ்வில் ஒரு வாய்ப்பு’ என்ற அமைப்பிற்கு தன் நன்றியை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
A Chance in Life என்ற பெயரில் இயங்கிவரும் இவ்வமைப்பின் அங்கத்தினர்களை இத்திங்கள் காலை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை, குழந்தைகளுக்கும் இளையோருக்கும் கல்வி வழங்க உதவுவதன் வழியாக, அவர்கள் தங்கள் வாழ்வில் இறைத்திட்டத்தைக் கண்டுகொள்ள இவ்வமைப்பு உதவிவருகிறது என்று கூறினார்.
தனி மனிதரின் வளர்ச்சியையும், சுற்றியிருக்கும் உலகின் வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு, அதேவேளை, ‘Laudato Si’ ஏட்டின் அடிப்படையில் சுற்றுச்சூழலையும் உள்ளடக்கிய கல்விக்கு ஆதரவு அளித்துவரும் இவ்வமைப்பினரைப் பாராட்டியதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு வருங்காலத் தலைமுறையினரை உருவாக்க வேண்டியதன் தேவையையும் வலியுறுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், உடன்பிறந்த உணர்வுடன் கூடிய ஓர் உலகை கட்டியெழுப்ப, பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வரும், 'வாழ்வில் ஒரு வாய்ப்பு’ என்ற இவ்வமைப்பினர், ஏழை மாணவ மாணவிகள் மீது காட்டிவரும் அக்கறை குறித்து தன் நன்றியை வெளியிடுவதுடன், அனைவர் மீதும் இறை ஆசீரை வேண்டுவதாகவும் கூறினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்