நவம்பர் 2 மாலையில் Priscilla கல்லறைகளில் திருப்பலி
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
இந்நாள்களில், இறப்பு மற்றும் இறந்தோர் பற்றி எதிர்மறை கலாச்சாரச் செய்திகள் பரப்பப்பட்டு வருவது வருத்தம் தருகின்றவேளை, கல்லறைகளைத் தரிசிக்கவும், செபிக்கவும் மறக்கவேண்டாமென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
நவம்பர் 01, இவ்வெள்ளி நண்பகலில், வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் மூவேளை செப உரையாற்றிய பின்னர், இவ்வாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில் முதல் கிறிஸ்தவர்கள் புதைக்கப்பட்ட இடங்களில் ஒன்றான Priscilla அடிநிலக்கல்லறைகளில் இச்சனிக்கிழமை மாலையில், தான் திருப்பலி நிறைவேற்றவிருப்பதாக அறிவித்தார்.
இத்தாலி மற்றும், பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த திருப்பயணிகளையும், குறிப்பாக, இத்தாலிய கத்தோலிக்க கழகத்தின் சிறாரையும் வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘தொன் போஸ்கோ மறைப்பணிகள் அமைப்பு’ நடத்திய, ‘புனிதர்கள் ஓட்டப்பந்தயம்’ என்ற நிகழ்வில் கலந்துகொண்ட விளையாட்டு வீரர்களையும் வாழ்த்தினார்.
இந்நாள்களில் சிறப்பிக்கப்படும் இரு முக்கிய கிறிஸ்தவ விழாக்கள், இவ்வுலகத் திருஅவைக்கும், விண்ணகத்திற்கும் இடையே நிலவும் பிணைப்பையும், நமக்கும், மறுவாழ்வுக்குச் சென்றுள்ள நம் உறவுகளுக்கும் இடையே நிலவும் உறவையும் நமக்கு நினைவுபடுத்துகின்றன என்றும் திருத்தந்தை கூறினார்.
மேலும், இத்தாலியின் கத்தோலிக்க கழகம் ஆரம்பிக்கப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அக்கழகத்தின் சிறார், இம்மூவேளை செப உரையில் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்