தேடுதல்

அடிநில கல்லறையில் செபிக்கும் திருத்தந்தை அடிநில கல்லறையில் செபிக்கும் திருத்தந்தை 

இறந்தோருக்காக செபிக்க அழைக்கும் திருத்தந்தை

"இந்த நவம்பர் மாதம் இறந்தோருக்காக செபிக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம். நம் குடும்பங்களில், நண்பர்களில் மற்றும் தெரிந்தவர்களில் இறந்தோரை, சிறப்பாக, திருப்பலி வழியே, இறைவனிடம் ஒப்படைப்போம்" - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நவம்பர் 6 இப்புதனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறைக்கல்வி உரையின் இறுதியில், இந்த நவம்பர் மாதத்தில் இறந்தோருக்காக செபிக்க அழைக்கப்பட்டுள்ளோம் என்று குறிப்பிட்டதை, அவர் தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார்.

"அன்பு நண்பர்களே, இந்த நவம்பர் மாதம் இறந்தோருக்காக செபிக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம். நம் குடும்பங்களில், நண்பர்களில் மற்றும் தெரிந்தவர்களில் இறந்தோரை, சிறப்பாக, திருப்பலி வழியே, இறைவனிடம் ஒப்படைப்போம்" என்ற சொற்களை, திருத்தந்தை, தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

மேலும், நவம்பர் 17ம் தேதி, பொதுக்காலத்தின் 33ம் ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் வறியோர் உலக நாளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், காலை 10 மணிக்கு திருப்பலியாற்றுவார் என்று திருப்பீட வழிபாட்டுத் துறை அறிவித்துள்ளது.

அத்துடன், நவம்பர் 9, வருகிற சனிக்கிழமை, உரோம் நகரில் உள்ள இலாத்தரன் பசிலிக்கா பேராலய நேர்ந்தளிப்பு விழா சிறப்பிக்கப்படுவதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பேராலயத்தில், மாலை 5.30 மணிக்கு ஆடம்பரத் திருப்பலியொன்றை தலைமையேற்று நடத்துவார் என்று, உரோம் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

இந்த பசிலிக்காவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மறையுரை மேடை ஒன்றையும், புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள சிலுவையில் அறையுண்ட இயேசுவின் திரு உருவத்தையும் திருத்தந்தை அர்ச்சிப்பார் என்றும், இந்த நேர்ந்தளிப்பு விழாவுக்கென உருவாக்கப்பட்டுள்ள புதிய செபங்களை திருத்தந்தை முதல் முறையாகப் பயன்படுத்துவார் என்றும் உரோம் மறைமாவட்ட அறிக்கை கூறுகிறது. (Zenit)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 November 2019, 11:58