பயணம் செய்யும் திருஅவையே, உண்மைத் திருஅவை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்
'அவரின்றி எதுவும் நம்மால் ஆற்ற இயலாது' என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் FIDES கத்தோலிக்கச் செய்தி பத்திரிகையாளர் Gianni Valente என்பவர் நடத்திய நீண்ட நேர்முகம் ஒன்று, புத்தக வடிவில், நவம்பர் 5ம் தேதி, இச்செவ்வாயன்று விற்பனைக்கு வருகிறது.
தான் இளவயதில் ஜப்பானுக்கு நற்செய்தி அறிவிக்கச் செல்ல விரும்பியதாகவும், பயணம் செய்யும் ஒரு திருஅவையே உண்மையான திருஅவையாக இருக்கமுடியும் எனவும் இந்நேர்காணலில் உரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இருக்கும் இடத்தை விட்டு வெளியேறி நற்செய்தி அறிவிக்க முனையவில்லை எனில், அது ஒரு தேங்கிப்போன நிறுவனமாக மாறிவிடும் எனவும், தன் கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஒவ்வொருவரின் நற்செய்தி அறிவிப்புப் பணியிலும், தூய ஆவியாரின் இருப்பை உணரவும், திருத்தூதர்கள் பணி நூலில் கூறப்பட்டுள்ளவற்றைப் புரிந்துகொள்ளவும் நாம் அழைப்புப் பெற்றுள்ளோம் எனவும், இப்பேட்டியில் கூறும் திருத்தந்தை, நாம் எவ்வாறு திருஅவையால் கவரப்படுகிறோம் என்பது குறித்தும் விளக்கமளித்துள்ளார்.
சான்று பகிர்வதன் வழியாக திருஅவை வளர்வது குறித்தும் இந்த நேர்முகத்தின்போது குறிப்பிட்டுள்ளத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எவரையும் கட்டாயப்படுத்தி மதம் மாற வைக்கக்கூடாது என்பதையும், விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
நற்செய்தி அறிவித்தலுக்கும், மறைசாட்சிய மரணங்களுக்கும் இடையேயுள்ள தொடர்பு குறித்தும், இந்த நீண்ட நேர்காணலில் விளக்கிக் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்