வறுமை, பட்டினியை ஒழிக்க திருத்தந்தையின் டுவிட்டர்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
‘வறுமையை ஒழிப்போம்’ என்ற கருத்துடன், அக்டோபர் 17, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட உலக நாளையொட்டி, #EndPoverty என்ற ‘ஹாஷ்டாக்’உடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.
"'நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்' (மத்தேயு 25,35). நமது சகோதரர், சகோதரிகளின் வறுமையில் பங்கேற்கும் குணத்தையும், கனிவையும் வரமாகப் பெறுவதற்கு வேண்டுகிறோம்" என்ற சொற்களை திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.
மேலும், அக்டோபர் 16, இப்புதனன்று உலக உணவு நாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், #ZeroHunger என்ற ‘ஹாஷ்டாக்’உடன் தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியை புதன் பிற்பகலில் வெளியிட்டார்.
"இறைவனின் திருவுளம் விரும்புவதுபோல், ஒவ்வொரு மனிதரும் தேவையான உணவைப் பெறுவதற்கு நாம் அனைவரும் இணைந்து உழைப்போமாக" என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக வெளியாயின.
ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.
அக்டோபர் 17, இவ்வியாழன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 2,162 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 81 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்