மூவேளை செப உரை - 131019 மூவேளை செப உரை - 131019 

சிரியா, ஈக்குவதோர் நாடுகள் குறித்து திருத்தந்தை கவலை

தங்கள் சொந்த இடங்களைவிட்டு வெளியேறும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ள வடகிழக்கு சிரியா மக்களைக் குறித்து வெளியாகும் செய்திகள் கவலை தருகின்றன - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

வடகிழக்கு சிரியாவில், மோதல்களில் ஈடுபட்டுவரும் குழுக்கள், அமைதி வழிகளுக்கு முன்வர வேண்டுமென்றும், நல்ல தீர்வுகளைக் கண்டுகொள்ளும் வண்ணம் உரையாடல்களை மேற்கொள்ள அனைத்துலக சமுதாயம் இக்குழுக்களை ஊக்குவிக்கவேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார்.

அக்டோபர் 13, இஞ்ஞாயிறு காலை, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில், ஐந்து அருளாளர்களை புனிதர்களாக உயர்த்திய திருப்பலியை தலைமையேற்று நடத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருப்பலியின் இறுதியில் வழங்கிய மூவேளை செப உரையில் இவ்வாறு கூறினார்.

சிரியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இராணுவ நடவடிக்கைகளால் தங்கள் சொந்த இடங்களைவிட்டு வெளியேறும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ள வடகிழக்கு சிரியா மக்களைக் குறித்து வெளியாகும் செய்திகள் கவலை தருகின்றன என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

மேலும், ஈக்குவதோர் நாட்டில் இடம்பெற்று வரும் சமுதாய பதட்ட நிலைகள் குறித்தும் தன் ஆழ்ந்த அக்கறையை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஈக்குவதோர் நாட்டின் இன்றைய நிலைகள் குறித்து ஆழந்த கவலை கொண்டுள்ளதாகவும், அப்பாவி பொதுமக்களின் பாதுகாப்புக்கும், அந்நாட்டின் அமைதிக்கும் தான் அழைப்பு விடுப்பதாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 October 2019, 15:50