கர்தினால் Stefan Wyszyński அவர்களின் அருளாளர் பட்டமளிப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்
போலந்து நாட்டின் கமியூனிச ஆட்சி காலத்தில் தலத்திருஅவையை வழிநடத்திய இறையடியார், கர்தினால் Stefan Wyszyński அவர்கள், வரும் ஆண்டு, ஜூன் 7ம் தேதி அருளாளராக உயர்த்தப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திங்களன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் இதனை அறிவித்த போலந்தின் Warsaw பேராயர், கர்தினால் Kazimierz Nycz அவர்கள், அருளாளராக அறிவிக்கும் திருப்பலியை, புனிதர் பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், கர்தினால் ஆஞ்சலோ பெச்சு அவர்கள் நடத்துவார் எனவும் தெரிவித்தார்.
இறையடியார் கர்தினால் Stefan Wyszyński அவர்களின் அருளாளர் பட்டமளிப்பு, வரும் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெறுவதற்கு முன்னர், போலந்து மக்கள் ஆன்மீக முறையில் தங்களை தயாரிக்க வேண்டும் எனவும் அழைப்புவிடுத்துள்ளார் கர்தினால் Kazimierz Nycz.
போலந்தை மதநம்பிக்கையற்ற ஒரு நாடாக மாற்ற விரும்பிய கம்யூனிச அரசால் கைது செய்யப்பட்டு துன்பங்களை அனுபவித்த இறையடியார், கர்தினால் Stefan Wyszyński அவர்கள், மத நம்பிக்கைகளை காப்பாற்றுவதற்காக மட்டுமல்ல, போலந்து நாட்டின் தனித்தன்மை, மக்களின் ஒன்றிணைப்பு ஆகியவற்றைக் காக்கவும் அயராது உழைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்