படைப்பைப் பாதுகாக்கும் திருத்தந்தையின் செய்தி படைப்பைப் பாதுகாக்கும் திருத்தந்தையின் செய்தி 

படைப்பின் காலம் – திருத்தந்தையின் சிறப்புச் செய்தி

இந்த பூமிக்கோளத்தை, மரணத்தை நோக்கி தள்ளிச்செல்லும் வழிகளைக் கைவிட்டு, வாழ்வை நோக்கி அழைத்துச் செல்வோம், ஏனெனில், இது, கடவுள் நமக்கு வழங்கியுள்ள அரும்பெரும் கொடை - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 1, இஞ்ஞாயிறு முதல், அக்டோபர் 4ம் தேதி முடிய சிறப்பிக்கப்படும் படைப்பின் காலத்தையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிறப்புச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த பூமிக்கோளத்தை, மரணத்தை நோக்கி தள்ளிச்செல்லும் வழிகளைக் கைவிட்டு, வாழ்வை நோக்கி அழைத்துச் செல்வோம், ஏனெனில், இது, கடவுள் நமக்கு வழங்கியுள்ள அரும்பெரும் கொடை என்று, திருத்தந்தை இச்செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வுலகின் வளங்கள், அக்கறையேதுமற்ற, கண்மூடித்தனமான சுரண்டல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செய்தியில் கவலையை வெளியிட்டுள்ளார்.

காற்று மாசுகேடடைவதை தடுக்கும் வழிகளைக் கண்டறிய, இம்மாதம் 23ம் தேதி, கூடிவரும் ஐ.நா. காலநிலை செயல்பாட்டு உச்சி மாநாடு, தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என்ற நம்பிக்கையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அதேவேளை, மக்களின் பொறுப்புணர்வுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

சந்திப்பும், பகிர்வும் இருக்கவேண்டிய இடத்தில், தன்னலமும், தனிப்பட்ட ஆதாய நோக்கமும் புகுந்து, இவ்வுலகை, ஓர் போர்க்களமாக மாற்றியுள்ளன என்று, தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை, நம் பொதுவான இல்லமான பூமியைப் பாதுகாக்க வேண்டிய ஒவ்வொருவரின் கடமையும் வலியுறுத்தப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 September 2019, 15:55