தேடுதல்

திருத்தந்தையின் மூவேளை செப உரையின்போது 150919 திருத்தந்தையின் மூவேளை செப உரையின்போது 150919  

காணாமல்போய் மீண்டும் கட்டித் தழுவப்படும் மகன் நாமே

கிழக்கு உக்ரைனில் மோதல்கள் முடிவுக்கு வந்து, நீடித்த அமைதி நிலவ, தான் தொடர்ந்து செபிப்பதாக உறுதியளிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்  :  வத்திக்கான் செய்திகள்

இரஷ்ய குடியரசுக்கும் உக்ரைன் நாட்டிற்கும் இடையே கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சி தரும் ஒரு செய்தியாக உள்ளது என இந்த ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கைதிகள் விடுதலையடைந்து தங்கள் குடும்பங்களுடன் இணைவதற்கு வாய்ப்புப் பெற்றுள்ளது குறித்து, தான் பெரு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிழக்கு உக்ரைனில் மோதல்கள் முடிவுக்கு வந்து, நீடித்த அமைதி நிலவ,  தான் தொடர்ந்து செபிப்பதாகவும் உறுதியளித்தார்.

இம்மாதம் 7ம் தேதி சனிக்கிழமையன்று, இரஷ்யாவும் உக்ரைனும் தங்களுக்குள் கைதிகளை விடுவித்து பரிமாறிக்கொண்டனர்.

35 கைதிகள் வீதம் இரு நாடுகளும் விடுவித்து பரிமாறிக்கொண்டது, இவ்விரு நாடுகளுக்கிடையே புதியதொரு அமைதி அத்தியாயத்தைத் திறந்துள்ளது என அரசியல் வல்லுனர்கள் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர்.

இந்த அமைதி முயற்சி குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும்,  ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் தன் மகிழ்ச்சியை வெளியிட்டார்.

மேலும், இஞ்ஞாயிறு முவேளை செப உரை கருத்துக்களை மையமாக வைத்து தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘கடவுள் நமக்காகக் காத்திருக்கிறார், அவர் சோர்ந்து போவதில்லை, அவர் மனம் தளர்வதில்லை. ஏனெனில், உவமைகளில் காணப்படும், மீண்டும் கட்டித் தழுவப்படும் மகனும், கண்டெடுக்கப்பட்ட நாணயமும், தடவிக் கொடுக்கப்பட்டு தோளில் சுமக்கப்படும் ஆடும், நாம் ஒவ்வொருவரும்தான்’, என அதில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 September 2019, 12:43