'இறைவனின் புன்முறுவல்' என்ற அடைமொழிக்கு உரிமையாளரான திருத்தந்தை முதலாம் ஜான் பால் 'இறைவனின் புன்முறுவல்' என்ற அடைமொழிக்கு உரிமையாளரான திருத்தந்தை முதலாம் ஜான் பால் 

திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்கள் இல்லம் திறப்பு

திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்கள், நற்செய்திகூறும் தாழ்ச்சியின் உருவகமாக, தனது மறைமாவட்ட மக்கள் மீது எப்போதும் அக்கறையாய் இருந்தார்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

“தூய ஆவியாரே, உயிர்ப்பின் மகிழ்வை, என்றென்றும் நிலைத்திருக்கிற இளமையான இதயத்தை எமக்குத் தந்தருளும்” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 03, இச்சனிக்கிழமையன்று, தன் டுவிட்டர் செய்தியில் இறைவேண்டல் எழுப்பியுள்ளார். 

மேலும், வட இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் Canale d’Agordo என்ற ஊரில், திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்கள் பிறந்து வளர்ந்த இல்லம், மக்கள் பார்வையிடும் ஒரு கண்காட்சியாக, ஆகஸ்ட் 2, இவ்வெள்ளியன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்களின் புனிதர்பட்ட ஆய்வுகளை ஒருங்கிணைக்கும் வேண்டுகையாளராக பணியாற்றும் கர்தினால் பெனியமீனோ ஸ்டெல்லா அவர்கள், இத்திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு, இத்திருத்தந்தையைப் பற்றிய ஒரு நூலையும் வெளியிட்டார்.

இந்நிகழ்வில் திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்கள் பற்றி, தனது தனிப்பட்ட அனுபவங்களைப் பகிரந்துகொண்ட கர்தினால் ஸ்டெல்லா அவர்கள், இத்திருத்தந்தையின் எளிமையும், தாழ்மையும், தன்னடக்கமுள்ள புனிதத்துவமும், உண்மையான நட்பும், எப்போதும் தனது இதயத்தில் பசுமையாக உள்ளன என்று தெரிவித்தார்.

இந்த நல்ல மேய்ப்பரின் சொந்த மறைமாவட்டமான, Vittorio Venetoவில் அவர் ஆயராகப் பணியாற்றிய 11 ஆண்டுகால மறைப்பணிகள் பற்றியும் பேசிய கர்தினால் ஸ்டெல்லா அவர்கள், நற்செய்திகூறும் தாழ்ச்சியின் உருவகமாக, இவர் தனது மறைமாவட்ட மக்கள் மீது எப்போதும் அக்கறையாய் இருந்தார் என்றும், தனது அருள்பணியாளர் அழைப்புக்கும், வாழ்வுக்கும், திருஅவையின் பணிக்கும் எப்போதும் எடுத்துக்காட்டாய் விளங்கினார் என்றும் கூறினார்.

திருத்தந்தை முதலாம் ஜான் பால் – வாழ்க்கை குறிப்புகள்

1912ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி பிறந்த அல்பீனோ லூச்சியானி அவர்கள், 1923ம் ஆண்டு, அருள்பணியாளர் பயிற்சியில் இணைந்து, 1935ம் ஆண்டு, அருள்பணியாளராக திருப்பொழிவு பெற்றார்.

திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்கள், 1978ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி முதல், அதே ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி முடிய 34 நாள்கள், திருத்தந்தையாகப் பணியாற்றினார். 'புன்முறுவல் பூக்கும் திருத்தந்தை' அல்லது, 'இறைவனின் புன்முறுவல்' என்ற அடைமொழிகளுக்கு உரிமையாளரான திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்கள், அதுவரை திருஅவையில் யாரும் எண்ணிப்பார்க்காதவண்ணம், இரு பெயர்களை இணைத்து, 'ஜான் பால்' என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்.

திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்களை, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் 2003ம் ஆண்டு, இறையடியார் என்று அறிவித்தார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2017ம் ஆண்டு, இவரை, வணக்கத்துக்குரியவர் என்று அறிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 August 2019, 15:35