பரகுவாய் கத்தோலிக்கர் பரகுவாய் கத்தோலிக்கர் 

பரகுவாய் இளையோர்க்கு திருத்தந்தை செய்தி

தனி நபராகவும், குழுமமாகவும், ஆண்டவரின் குரலுக்குச் செவிசாய்த்து, மறைப்பணியாளர்களாக, ஏழைகள் மத்தியில், மீட்பின் நற்செய்திக்கு, சாட்சிகளாக விளங்குமாறு பரகுவாய் இளையோர்க்கு அழைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இயேசு கிறிஸ்துவை நண்பராக ஏற்று, அவரில் நிலைத்திருந்து, மிகுந்த பலன்தருமாறு, பரகுவாய் நாட்டு இளையோரைக் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தென் அமெரிக்க நாடான பரகுவாய் கத்தோலிக்கத் திருஅவை, ‘இளையோரின் மூன்று ஆண்டுகள்’ என்ற தலைப்பில், கடந்த மூன்று ஆண்டுகளாகச் சிறப்பித்துவந்த நிகழ்வுகளின் முத்தாய்ப்பாக, ஆகஸ்ட் 23, கடந்த வெள்ளி முதல், ஆகஸ்ட் 25 ஞாயிறு வரை, மூன்று நாள்கள் கருத்தரங்கை நடத்தியது.

இதில், நாட்டின் எல்லா மறைமாவட்டங்கள் மற்றும், பல்வேறு இயக்கங்களிலிருந்து, ஏறத்தாழ 600 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இக்கருத்தரங்கின் நிறைவாக, இந்நிகழ்வுகளின் தலைவரும், San Pedro ஆயருமான Pierre Jubinville அவர்கள் திருப்பலி நிறைவேற்றியபின், இந்நிகழ்வுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியிருந்த செய்தியை வாசித்தார்.

தம் நண்பர்களாக வாழ்வதற்கு அழைப்பு விடுக்கும் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுமாறு, பரகுவாய் இளையோரிடம் கேட்டுக்கொண்டுள்ள, திருத்தந்தை, அதன் வழியாக, இளையோர், இயேசுவோடு நிலைத்திருந்து, மிகுந்த கனி தருவார்கள் என்றும் கூறியுள்ளார்.

திருத்தந்தையின் இச்செய்தியை, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 August 2019, 15:12