தேடுதல்

அர்ஜென்டீனா நாட்டு ஆயர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அர்ஜென்டீனா நாட்டு ஆயர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

அர்ஜென்டீனாவுக்கு செல்ல விழையும் திருத்தந்தை

அர்ஜென்டீனா நாட்டிற்கு வருகிற 2020ம் ஆண்டு செல்ல விழைவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டில் வெளியாகும் “La Nacion” என்ற செய்தித்தாளுக்கு, அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அர்ஜென்டீனா நாட்டிற்கு வருகிற 2020ம் ஆண்டு செல்ல விழைவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அர்ஜென்டீனாவில் வெளியாகும் “La Nacion” என்ற செய்தித்தாளுக்கு, ஜூலை 8, இத்திங்களன்று அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார் என்று, Zenit கத்தோலிக்கச் செய்தி அறிவித்துள்ளது.

இவ்வாண்டு மே மாதம், அர்ஜென்டீனா நாட்டின் ஆயர்கள், வத்திக்கானுக்கு மேற்கொண்ட 'அத் லிமினா' பயணத்தில், திருத்தந்தையைச் சந்தித்த வேளையில், தான் அர்ஜென்டீனா வருவதற்கு ஆவலாக இருந்தாலும், தன் ஏனைய கடமைகள் அதனை நிறைவேற்ற இடம் அளிக்கவில்லை என்று, திருத்தந்தை, ஆயர்களிடம் கூறியிருந்தார்.

இவ்வாண்டு அக்டோபர் மாதத்தில், அர்ஜென்டீனா நாட்டின் அரசுத்தலைவர் தேர்தல் இடம்பெறுவதால், அந்தத் தேர்தல் முடிந்தபின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அடுத்த ஆண்டு, தன் பயணத்தை மேற்கொள்ள விழைகிறார் என்று “La Nacion” என்ற செய்தித்தாள் கணித்துள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் விருப்பத்தை மட்டுமே தெரிவித்துள்ளார் என்றும், இனி வரும் நாள்களில், அவரது பயணத்திட்டங்களின் விவரங்கள் வெளிவரும் என்று Zenit செய்தி கூறியுள்ளது.

1936ம் ஆண்டு, அர்ஜென்டீனாவின் புவனஸ் அயிரஸ் நகரில் பிறந்த ஹோர்கே மாரியோ பெர்கோலியோ அவர்கள், 2013ம் ஆண்டு, பிரான்சிஸ் என்ற பெயருடன், கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராகப் பொறுப்பேற்றபின், தன் தாய்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வது, ஏழு ஆண்டுகள் கழிந்து நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. (Zenit)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 July 2019, 15:04