புலம்பெயர்ந்தோருடன் திருத்தந்தை திருப்பலி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்
இத்தாலியின் லாம்பதூசா தீவில் அமைந்துள்ள புலம்பெயர்ந்தோர் முகாமை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சென்று பார்வையிட்டதன் 6ம் ஆண்டு நினைவையொட்டி, புலம்பெயர்ந்தோருடன் திருப்பலி ஒன்றை, ஜூலை 8, வரும் திங்களன்று நிறைவேற்ற உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், உள்ளுர் நேரம் 11 மணிக்கு இடம்பெறும் இத்திருப்பலியில், புலம்பெயர்ந்தோர், குடியேற்றதாரர்கள், அவர்களுக்கு உதவுவோர் என 250 பேர் கலந்து கொள்வர் என அறிவித்தார், திருப்பீடச் செய்தித்துறையின் இடைக்காலத் தலைவர், அலெஸ்சாந்த்ரோ ஜிசோத்தி.
ஒன்றிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் ஒரு பகுதியாக இயங்கும் குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்படும் இத்திருப்பலி, தனிப்பட்ட குடும்ப நிகழ்வுபோல் இருக்கும் என்பதால், வத்திக்கான் தவிர ஏனைய சமூகத்தொடர்புத் துறையினர் இதில் பங்கேற்கமாட்டார்கள் எனவும் அறிவித்தார் ஜிசோத்தி.
போர் மற்றும் வறுமையிலிருந்து தப்பிச்செல்லும் வழியில் உயிரிழந்தோரையும், இன்னும் வாழ்வில் பல போராட்டங்களை சந்தித்துக் கொண்டிருக்கும் புலம்பெயர்ந்தோர் மற்றும் குடியேற்றதாரர்களையும் நினைவுகூரும் விதமாக, இம்மாதம் 8ம் தேதியன்று, திருப்பலியை நிறைவேற்ற, திருத்தந்தை ஆவல் கொண்டுள்ளதாகக் கூறினார், திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் ஜிசோத்தி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்