பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் புதிய செயலர்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் செயலராக, அருள்பணி Indunil Janakaratne Kodithuwakku Kankanamalage அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 3 இப்புதனன்று நியமித்துள்ளார்.
இத்திருப்பீட அவையின் செயலராகப் பணியாற்றிவந்த ஆயர் Miguel Ángel Ayuso Guixot அவர்கள், அதே அவையின் தலைவராக நியமனம் பெற்றதையடுத்து, அவ்வவையில் நேரடிச் செயலராக பணியாற்றி வந்த அருள்பணி Kankanamalage அவர்கள், செயலராக நியமனம் பெற்றுள்ளார்.
1966ம் ஆண்டு இலங்கையில் பிறந்த Kankanamalage அவர்கள், பதுளை மறைமாவட்டத்தின் அருள்பணியாளராக அருள்பொழிவு பெற்று, 2002ம் ஆண்டு, உரோம் நகரில் உர்பான் பாப்பிறைப் பல்கலைக் கழகத்தில் மறைபரப்புப் பணியியல் துறையில் பேராசிரியராக தன் பணிகளைத் தொடர்ந்தார்.
2012ம் ஆண்டு, ஜூன் 12ம் தேதி, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், அருள்பணி Kankanamalage அவர்களை, பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் நேரடிச் செயலராக நியமனம் செய்தார்.
பிற மதத்தினருடன் உரையாடல்களை மேற்கொள்வதற்கென, புனிதத் திருத்தந்தை 6ம் பவுல் அவர்களால் 1964ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பல்சமய உரையாடல் அவை, தற்போது ஏறத்தாழ 30 கர்தினால்கள் மற்றும் ஆயர்களை தன் உறுப்பினர்களாகவும், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 50க்கும் அதிகமானோரை தன் ஆலோசகர்களாகவும் கொண்டு இயங்குகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்