தேடுதல்

ஆங்கிலிக்கன் தலைவர்களுடன் திருத்தந்தை ஆங்கிலிக்கன் தலைவர்களுடன் திருத்தந்தை 

தென்னாப்ரிக்க ஆங்லிக்கன் சபை குரு Lapsley சந்திப்பு

தென்னாப்ரிக்க ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபை குரு Michael Lapsley அவர்களும், தொழிலாளர்களுக்கு உதவும் இத்தாலிய கழக அமைப்பாளர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினர்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

தூய ஆவியார், நம் வாழ்வில் ஆற்றும் செயல்களைக் கண்டுணர வேண்டுமென்று, ஜூன் 15, இச்சனிக்கிழமையன்று, வெளியிட்டுள்ள இரண்டாவது டுவிட்டர் செய்தி வழியாகக் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

“நாம் எல்லாரும் நம் சொந்த மொழி மற்றும் மரபில், அதேவேளை, சகோதரர், சகோதரிகள் மத்தியில் மகிழ்வாக ஒன்றிணைந்து வாழ்வது மற்றும் பயணிப்பதன் அழகைக் கண்டுணர, தூய ஆவியார் நமக்கு அழைப்பு விடுக்கிறார் மற்றும் நமக்கு உதவுகிறார்” என்ற சொற்கள், திருத்தந்தையின் இந்த டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

இன்னும், தென்னாப்ரிக்க ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபை குருவும், சமுதாய ஆர்வலருமான Michael Lapsley அவர்களும், தொழிலாளர்களுக்கு உதவும் இத்தாலிய கழக அமைப்பாளர்களும், ஜூன் 15, இச்சனிக்கிழமை காலையில், திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினர்.

1949ம் ஆண்டு நியு சிலாந்தில் பிறந்த Michael Lapsley அவர்கள், 1973ம் ஆண்டில் தென்னாப்ரிக்கா வந்தார். அங்கு நிலவிய, கறுப்பினத்தவர்க்கெதிரான கடுமையான இனவெறிக் கோட்பாட்டைக் கண்டு, அதனை எதிர்த்து வெளிப்படையாகப் பேசத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Camerinoவுக்கு திருத்தந்தை

2016ம் ஆண்டில் கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட, இத்தாலியின் மார்க்கே மாநிலத்திலுள்ள Camerinoவுக்கு, ஜூன் 16, இஞ்ஞாயிறன்று, மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்கின்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்நிலநடுக்கத்தால், அப்பகுதியின் 500 ஆலயங்களில், 356, பயன்படுத்தப்பட முடியாத நிலையில் உள்ளன என்றும், 3,500க்கும் மேற்பட்ட கலைப்பொருள்கள், சேமிப்புக் கிடங்கில் உள்ளன என்றும், ஆயர் Francesco Massara அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 June 2019, 14:40