திருத்தந்தை - கலந்துரையாடல் நடத்த அஞ்ச வேண்டாம்
மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்
இயேசு கிறிஸ்து மலைப்பொழிவில் திருவாய்மலர்ந்தருளிய பேறுகள், எத்தகைய மனிதர்களுக்குரியவை என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 22, இச்சனிக்கிழமையன்று வெளியிட்ட, தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.
“மலைப்பொழிவு பேறுகள், மிகச் சிறந்த திறமையைக் கொண்டிருப்பவர்களுக்காக அருளப்பட்டவை அல்ல, மாறாக, ஒவ்வொரு நாள் வாழ்விலும், சவால்களையும், சோதனைகளையும் எதிர்கொள்கின்ற சாதாரண மனிதர்களுக்குரியவை” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில், இச்சனிக்கிழமையன்று பதிவாகியிருந்தன.
காணொளிச் செய்தி
மேலும், ‘இகழ்ச்சியுடன் கூடிய கொடுமை’ என்ற தலைப்பில், Scholas Occurentes அமைப்பு, உரோம் நகரில் நடத்திய இணையதள கருத்தரங்கில் கலந்துகொண்ட இளையோர் பிரதிநிதிகளுக்கு, காணொளிச் செய்தி அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கலந்துரையாடல் நடத்துவதற்கு அஞ்ச வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
மற்றவரால் தாக்கப்படுகையில், துன்புறுதல் இடம்பெறுகின்றது மற்றும் தனித்துவம் குறைகின்றது என்றுரைத்துள்ள திருத்தந்தை, கொடுமைப்படுத்தும் செயலுக்கு எதிராய் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏனெனில், இது மனித மாண்பைக் குறைக்கின்றது என்று கூறியுள்ளார்.
உரையாடல், ஒன்றுசேர்ந்து பயணித்தல், மற்றவர் பேசுவதைப் பொறுமையுடன் உற்றுக்கேட்டல் போன்றவைகளில் ஈடுபட வேண்டும், அப்போது, உண்மையான அமைதி கிடைக்கும் மற்றும் அந்த உண்மையான அமைதி, உங்களின் சொந்த மாண்பைக் கண்டுணர உதவும் என்றும் திருத்தந்தை, அக்காணொளியில், இளையோரிடம் தெரிவித்துள்ளார்.
உரையாடல் நடத்துவதற்கு அஞ்சாமல், வாழ்வில் முன்னோக்கிச் செல்லுமாறு, அச்செய்தியின் இறுதியில், இளையோரை ஊக்கப்படுத்தியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
பாப்பிறை Scholas Occurentes அமைப்பின் பன்னாட்டு இளையோர் கண்காணிப்பு குழு, நடத்திய ‘இகழ்ச்சியுடன் கூடிய கொடுமை, மற்றும், டிஜிட்டல் தொழில்நுட்ப சாதனங்கள் வழியாக துன்புறுத்தலுக்கு’ எதிராகச் செயல்படுவது குறித்த, இக்கருத்தரங்கை, ஜூன் 21, இவ்வெள்ளியன்று நடத்தியது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்