கொன்வெஞ்சுவல் பிரான்சிஸ்கன் துறவு சபையினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் கொன்வெஞ்சுவல் பிரான்சிஸ்கன் துறவு சபையினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

நற்செய்தியை தன் வாழ்வுச் சட்டமாக கொண்ட துறவு சபை

உடன்பிறந்த உணர்வுடன் இருப்பவர்கள், ஒன்றை பயன்படுத்தி தூக்கியெறியும் மனநிலையினர் அல்ல, மாறாக, ஒருவரையொருவர் கட்டியெழுப்புபவர்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் :  வத்திக்கான் செய்திகள்

உடன்பிறந்த உணர்வை ஒருவருக்கொருவர் கொண்டிருந்து, அமைதியை பறைசாற்றுங்கள் என இத்திங்கள் காலை தன்னை சந்திக்க வந்திருந்த கொன்வெஞ்சுவல் பிரான்சிஸ்கன் துறவு சபையினரிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கள் புதிய உலகத்தலைவருடன் தன்னை சந்தித்த கொன்வெஞ்சுவல் பிரான்சிஸ்கன் துறவு சபையின் உலகப்பொது அவை பிரதிநிதிகளை ஜூன் 17 இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

புதிய உலகத்தலைவர் அருள்பணி Carlos Trovarelli அவர்களுக்கு வாழ்த்துக்களை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த கோடைக்காலத்தில் இச்சபையினர் கூட்டிய சிறப்பு பொதுமன்றக் கூட்டத்தில், சபை விதிமுறைகளை புதுப்பித்ததும், அதற்கு திருப்பீடம் அங்கீகாரம் வழங்கியுள்ளதும் குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்டார்.

நற்செய்திக்கு செவிமடுப்பதிலிருந்து பிறந்ததாக தன்னை வெளிப்படுத்தி, நற்செய்தியையே தன் வாழ்வாகவும், வாழ்வுச் சட்டமாகவும் கொண்டிருக்கும் கொன்வெஞ்சுவல் பிரான்சிஸ்கன் துறவு சபை, இளந்துறவிகளுக்கு பயிற்சியளித்தல், கலாச்சாரங்களிடையே ஏற்புடைமை, பகிர்தல், பொருளாதார வெளிப்படைத்தன்மை போன்றவைக் குறித்து அண்மையில் விவாதித்து, மாற்றங்களை புகுத்தியுள்ளதையும் தன் உரையில் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

உடன்பிறந்த உணர்வு என்பது நன்றியுணர்வுடன் வரவேற்கப்பட வேண்டும், இங்கு, எவரும் விலக்கி வைக்கப்படாமல் அனைவரும் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள், மற்றும், இங்கு இவ்வுணர்வுடன் இருப்பவர்கள், ஒன்றை பயன்படுத்தி தூக்கியெறிபவர்கள் அல்ல, மாறாக ஒருவரையொருவர் கட்டியெழுப்புபவர்கள் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அதிகாரத்திற்கான சோதனை மிகப் பெரியதாக இருக்கும் இவ்வுலகில், உங்களுடைய நோக்கமெல்லாம் பிறருக்கு பணியாற்றுவதிலேயே இருக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களும் பணிபெறுபவர்களாக இல்லாமல் இயேசுவைப்போல், பணியாளர்களாக செயல்படவேண்டும் என  அசிசியின் புனித பிரான்சிஸ், தன் சபை அங்கத்தினர்களிடம் கூறியதை நினைவுக்குக் கொணர்ந்தார்.

அமைதியை எடுத்துரையுங்கள் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதிக்குரிய முன்நிபந்தனையாக ஒப்புரவு இருப்பதையும், மன்னிப்பும் இரக்கமும் இன்றி அமைதி பிறக்கமுடியாது என்பதையும்  சுட்டிக்காட்டினார்.

அமைதி என்பது, பிரச்சனைகள் ஏதுமற்ற ஒரு நிலை அல்ல, மாறாக, இறைவனின் இருப்பை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என மேலும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 June 2019, 16:28