யாஜ் கலாச்சார மாளிகை வளாகத்தில் இளையோர் சந்திப்பு யாஜ் கலாச்சார மாளிகை வளாகத்தில் இளையோர் சந்திப்பு 

யாஜ் கலாச்சார மாளிகை வளாகத்தில் இளையோர் சந்திப்பு

ருமேனியாவில் ஜூன் 01, இச்சனிக்கிழமை தேசிய குழந்தைகள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. எனவே அந்நாட்டுக் குழந்தைகளுக்காகச் சிறப்பாகச் செபித்து, அவர்களை, அன்னைமரியாவின் அரவணைப்பில் அர்ப்பணித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா - வத்திக்கான்

ருமேனியாவின் யாஜ் நகரின் கத்தோலிக்கப் பேராலயத்தில், வயதானவர்களைச் சந்தித்த பின், அதற்கருகிலுள்ள அந்நகரின், கலாச்சார மாளிகை வளாகம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். 36 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில், 298 அறைகளைக் கொண்ட இம்மாளிகை, 1909ம் ஆண்டுக்கும், 1925ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது. இது, நூற்றாண்டுகளாக, மோல்டாவியா அரசர்கள் வாழ்ந்த மாளிகையாகும். அவ்விடத்தில் விழாச் சூழலில் கூடியிருந்த, ஏறத்தாழ ஒரு இலட்சம், இளையோர், சிறார் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் திறந்த காரில் சென்றார், திருத்தந்தை. இந்நிகழ்வில், முதலில், மரபு ஆடைகளை அணிந்திருந்த நான்கு சிறார், மலர்கள் கொடுத்து, திருத்தந்தையை வரவேற்றனர். இச்சிறாருடன் மேடையில் ஏறிய திருத்தந்தை, அன்னை மரியா திருவுருவத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். பேராயர் Petru Gherghel அவர்களின் வரவேற்புரை, பாடல் எனத் தொடங்கிய இந்நிகழ்வில், எட்வர்ட் என்ற ஓர் இளைஞர், அவரது தோழி, மற்றும், எலிசபெத்-ஜோன் தம்பதியர் சாட்சியம் பகர்ந்தனர். இத்தம்பதியருக்கு 11 பிள்ளைகள். இவர்களில் இருவர் அருள்பணியாளர்கள் மற்றும் இருவர் அருள்சகோதரிகள். இளைஞர் எட்வர்ட் தனது தோழியுடனும், இத்தம்பதியர் தங்களது குடும்பத்தினருடனும் திருத்தந்தையிடம் சென்று ஆசீர்பெற்றனர். திருத்தந்தையும், இவர்களுக்கு செபமாலைகளை அளித்தார். இவர்களின் சாட்சியங்களை வைத்து தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ். ருமேனியாவில் ஜூன் 01, இச்சனிக்கிழமை குழந்தைகள் நாள் கடைப்பிடிக்கப்பட்டதைக் குறிப்பிட்டு, குழந்தைகளை வாழ்த்துவோம், அவர்களுக்காகச் செபித்து அன்னைமரியாவின் அரவணைப்பில் அவர்களை வைப்போம் எனச் சொல்லி, தனது உரையைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்சனிக்கிழமை காலையில் சுமுலியு சுக் அன்னை மரியா திருத்தல வளாகத்தில் கூடியிருந்த மக்கள் வெள்ளத்திற்குப்பின், இந்நிகழ்விலும் மக்கள் பேரலையெனத் திரண்டிருந்தனர். இந்நிகழ்வை நிறைவுசெய்து, யாஜ் நகரிலிருந்து, புக்காரெஸ்ட் நகருக்கு ஒரு மணி நேரம் விமானப் பயணம் செய்து, அந்நகர் விமானத்தளத்தை அடைந்தபோது, உள்ளூர் நேரம் இரவு 8.05 மணியாக இருந்தது. இத்துடன் இச்சனிக்கிழமை பயண நிகழ்வுகள் நிறைவுற்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 June 2019, 14:50