கிறிஸ்தவர்கள், மற்றவர்களுக்கு ஓர் ஆசீராக முடியும்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்
மிகச்சிறியவற்றைக் கொண்டு மிகப்பெரும் விடயங்களை இயேசுவின் அன்பு சாதிக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதாக திருநற்கருணை உள்ளது என உரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவின் திரு உடல் திரு இரத்தம் திருவிழாவையொட்டி உரோம் நகரின் Casal Bertone பங்குத்தளத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எல்லையற்ற ஆற்றலைக் கொண்டுள்ள இறைவன், தன்னை ஒரு சிறு ரொட்டித் துண்டுக்குள் அடக்கி வைத்திருப்பது, அவரது அன்பின் வெளிப்பாடாக உள்ளது என்றார்.
பிறருக்கு உதவிச் செய்ய மறுத்து தனக்குள்ளேயே சுயநலவாதியாக வாழ்வதற்கு எதிரான மருந்தாக திருநற்கருணை உள்ளது எனவும் கூறிய திருத்தந்தை, ரொட்டியை பிட்டு பிறருடன் பகிரும் செயல், நாமும் பிறருக்கு நம்மையே வழங்கவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டி நிற்கிறது என உரைத்தார்.
அன்பு, மற்றும், அக்கறைக்காக மக்கள் பசியாய் இருத்தல், முதியோர் தனிமையில் வாழ்தல், குடும்பங்கள் சிரமங்களைச் சந்தித்தல் போன்ற சூழல்களில் இயேசு நம்மை நோக்கி, அவர்களுக்கு ஏதாவது உண்ணக் கொடுங்கள்' என்று கேட்கிறார் என தன் மறையுரையில் கூறினார் திருத்தந்தை.
திருப்பலியின் வழியாக ஆசீரைப் பெறும் கிறிஸ்தவர்கள், தாங்களும் மற்றவர்களுக்கு ஓர் ஆசீராக மாறமுடியும் என, தன் மறையுரையில், மேலும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்