தேடுதல்

புக்காரெஸ்ட் புனித யோசேப்பு பேராலயத்தில் மறையுரை வழங்கும் திருத்தந்தை  புக்காரெஸ்ட் புனித யோசேப்பு பேராலயத்தில் மறையுரை வழங்கும் திருத்தந்தை  

புனித யோசேப்பு பேராலயத்தில் திருத்தந்தையின் மறையுரை

பயணிக்கும் மரியாவை தியானிக்கும்போது, இந்நாட்டில், தியாகங்களையும், பக்தி முயற்சிகளையும் மேற்கொண்ட அன்னையரை, பாட்டிமார்களை எண்ணிப்பார்க்கிறோம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, இரு பெண்களுக்கிடையே, மகிழ்வோடும், வாழ்த்துக்களோடும் நிகழ்ந்த சந்திப்பை நற்செய்தியில் கேட்டோம். எலிசபெத்தின் வயிற்றில் இருந்த குழந்தை மகிழ்வில் துள்ளியது. மரியா, இறைவன் செய்த அரும்பெரும் செயல்களைப் பாடுகிறார். அவரது பாடலில் நாமும் இணையும்போது, மூன்று கருத்துக்களைத் தியானிக்க இயலும். சீடர்களில் முதன்மையானவரான மரியா பயணிக்கிறார், மரியா சந்திக்கிறார், மரியா மகிழ்கிறார்.

மரியா பயணிக்கிறார்

மரியா பயணிக்கிறார்... நாசரேத்திலிருந்து, எலிசபெத், சக்கரியாவின் இல்லத்திற்கு. இது மரியா மேற்கொண்ட முதல் பயணம். இதன்பின்னர், அவர், இயேசுவின் பிறப்பிற்காக, கலிலேயாவிலிருந்து பெத்லகேமுக்கு; குழந்தையை, ஏரோதிடமிருந்து காப்பதற்காக, எகிப்துக்கு; ஒவ்வோர் ஆண்டும், பாஸ்கா விழாவில், எருசலேமுக்கு (காண்க. லூக்கா 2:31), இறுதியில், இயேசுவைத் தொடர்ந்து, கல்வாரிக்கு, மரியா பயணிக்கிறார். இந்த பயணங்கள் அனைத்திலும் ஒரு பொதுவான அம்சம் உள்ளது: அவை எளிதானவையாக இல்லை; அவற்றை மேற்கொள்ள துணிவும், பொறுமையும் தேவைப்பட்டன.

பயணிக்கும் மரியாவை தியானிக்கும்போது, இந்நாட்டில், தியாகங்களையும், பக்தி முயற்சிகளையும் மேற்கொண்ட அன்னையரை, பாட்டிமார்களை எண்ணிப்பார்க்கிறோம். அமைதியாக, உறுதியாக, அவர்கள், தங்கள் குழந்தைகளுக்காகவும், குடும்பங்களுக்காகவும் எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோல் தோன்றினும், எதிர்நோக்கினர் (உரோமையர் 4:18). மரியாவையும், இந்நாடுகளின் அன்னையரையும் எண்ணிப்பார்க்கும்போது, நம் உள்ளங்களில் நம்பிக்கை எழுகிறது. நாம் அழுத்தந்திருத்தமாகச் சொல்வோம்: நம் மக்களில் எதிர்நோக்கிற்கு அதிக இடம் உண்டு.

மரியா சந்திக்கிறார்

மரியா, வயதில் முதிர்ந்த எலிசபெத்தைச் சந்திக்கிறார் (காண்க. லூக்கா 1:39-56). வயதில் முதிர்ந்தவர் என்றாலும், எலிசபெத்துதான், தூய ஆவியாரால் நிறைக்கப்பட்டு, எதிர்காலத்தைப் பற்றி பேசுகிறார். நற்செய்தியில் இடம்பெறும் "காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" (காண்க. யோவான் 20:29) என்ற இறுதி பேற்றினுக்கு முன்னோடியாகத் திகழ்கிறார். இங்கு இளமையும், முதுமையும், ஒன்று மற்றதன் மிகச் சிறந்ததை தூண்டி எழுப்பும்வண்ணம் சந்திக்கின்றன.

நமக்குள்ளேயே தங்கிவிடாமல், வெளியேறிச் செல்ல, தூய ஆவியார் நம்மைத் தூண்டுகிறார். அதே ஆவியானவர், வெளித்தோற்றங்களைத் தாண்டி பார்க்கும்படியும், மற்றவர்களில் உள்ள நல்லவற்றைப் பற்றி பேசவும் தூண்டுகிறார். இதுவே சந்திக்கும் கலாச்சாரத்தின் பண்பு. கிறிஸ்தவர்களாகிய நாம், சந்திப்பின் வழியே, அனைவரையும் அரவணைத்து காக்கும் திருஅவையின் தாய்மையை உணர்கிறோம். பல்வேறு வழிபாட்டு முறைகளைச் சேர்ந்தவர்கள் சந்திக்கும்போது, ஒவ்வொருவரும் தாங்கள் எந்தப் பிரிவினர் என்பதை முன்னிறுத்தாமல், அனைவரும் இணைந்து, இறைவனைப் புகழும்போது, மாபெரும் செயல்கள் நிகழ்கின்றன. மீண்டும் நாம் அழுத்தந்திருத்தமாகக் கூறுவோம்: "காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" (காண்க. யோவான் 20:29).

மரியா, எலிசபெத்தைச் சந்திக்க பயணிப்பது, இறைவன் எங்கு வாழ விரும்புகிறார் என்பதை, நமக்கு நினைவுறுத்துகிறது. மக்களின் நடுவில், இறைவனின் புனித இடம் உறைந்துள்ளது, இறைவனின் இதயத்துடிப்பை, நாம் மக்களில் உணர முடியும்.

மரியா மகிழ்கிறார்

மரியா மகிழ்கிறார்... ஏனெனில், அவர், 'கடவுள் நம்மோடு' எனப்படும் 'இம்மானுவேல்'ஐ, தன் உதரத்தில் தாங்கியுள்ளார். மகிழ்வு இல்லாமல், நாம் செயலற்று போகிறோம், துயரமான நிலைக்கு அடிமையாகிறோம். துயரம் மற்றும் மனத்தளர்ச்சியில் நாம் மிதந்து செல்லும்போது, நம் நம்பிக்கை தடுமாறுகிறது. அரும்பெரும் செயல்களை ஆற்றவல்ல (காண்க லூக்கா 1:49) இறைவனின் குழந்தைகள் நாம் என்பதை உணராமல், அனைத்தையும் நம் பிரச்சனைகளாக மட்டுமே மாற்றிவிடுகிறோம். மரியா நம் உதவிக்கு வருகிறார், அனைத்தையும் பிரச்சனைகளாக குறைத்துவிடாமல், ஆண்டவரைப் போற்றிப் பெருமைப்படுத்துகிறார்.

நம் மகிழ்வின் இரகசியத்தை இங்கு நாம் உணர்கிறோம். மரியா, பல பிரச்சனைகள் நடுவிலும், இறைவனின் மேன்மையிலிருந்து துவங்குகிறார். நம் உள்ளங்களை, ஆண்டவருக்கும், நம் சகோதரர், சகோதரிகளுக்கும் திறந்து வைக்கும்போது, ஆண்டவர் எப்போதும் அற்புதங்களை ஆற்றுகிறார் என்பதை, மரியா நமக்கு நினைவுறுத்துகிறார்.

இந்நாட்டின் உன்னத சாட்சிகள்

இந்நாட்டில் வாழ்ந்த உன்னத சாட்சிகளை எண்ணிப்பார்ப்போம். பெரும் இன்னல்களுக்கு நடுவிலும் இவர்கள், உலகின்மீது நம்பிக்கை கொள்ளாமல், இறைவனை நம்பினர். நமக்கு அடுத்த வீடுகளில் வாழ்ந்து, நமக்கு வழிகாட்டிய இந்த எளிய புனிதர்களுக்காக நான் நன்றி சொல்ல விழைகிறேன்.

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, மரியா பயணிக்கிறார், மரியா சந்திக்கிறார், மரியா மகிழ்கிறார். ஏனெனில், அவர் இறைவனின் ஆசீரைக் கொணர்பவராக விளங்கினார். அவரைப்போல, நாமும் ருமேனியா நாட்டிற்குத் தேவையான ஆசீரை, அஞ்சாமல் கொணர்பவர்களாக வாழ்வோம். அக்கறையற்ற நிலையையும், பிரிவையும் பொய்யாக்கும் சந்திப்பு கலாச்சாரத்தை வளர்ப்பவர்களாக நீங்கள் வாழ்ந்து, இந்த நாடு முழுவதும் ஆண்டவரின் கருணையைப் பாட உதவுவீர்களாக. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 June 2019, 10:42