பத்து இறை அடியாரின் புண்ணிய வாழ்வுக்கு ஒப்புதல்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
புனிதர் பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், கர்தினால் ஆஞ்செலோ பெச்சு அவர்கள், ஜூன் 11, இச்செவ்வாய் மாலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து, பத்து இறை அடியாரின் புண்ணியம் மிகுந்த பண்புகளை சமர்ப்பித்த வேளையில், அவற்றை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை, அவர்களது புனிதர் பட்ட வழிமுறைகளுக்கு ஒப்புதல் வழங்கினார்.
ஸ்பெயின் நாட்டின் Pola de Somiedo என்ற ஊரில், 1936ம் ஆண்டு, அக்டோபர் 28ம் தேதி, கொல்லப்பட்ட இறையடியார் Pilar Gullón Yturriaga, மற்றும் இரு பொதுநிலையினரின் மரணம், மறைசாட்சிய மரணம் என்பதை திருத்தந்தை ஏற்றுக்கொண்டார்.
1897ம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டில் இறையடி சேர்ந்த மறைமாவட்ட அருள்பணியாளர், Augustine Tolton மற்றும், 1993ம் ஆண்டு இறையடி சேர்ந்த இத்தாலியின் மறைமாவட்ட அருள்பணியாளர் Enzo Boschetti ஆகிய இறையடியாரின் புண்ணியம் மிகுந்த வாழ்வை திருத்தந்தை அங்கீகரித்து, ஒப்புதல் வழங்கினார்.
மேலும், இத்தாலி நாட்டைச் சேர்ந்த அருள் சகோதரர், Felice Tantardini, அருள் பணியாளர் Giovanni Nadiani, அருள் சகோதரிகள், Maria Paola Muzzeddu, மற்றும் Maria Santina Collani ஆகிய நான்கு இறையடியாரின் புண்ணியம் மிகுந்த வாழ்வை திருத்தந்தை அங்கீகரித்து, ஒப்புதல் வழங்கினார்.
திருத்தந்தையின் ஒப்புதலைப் பெற்ற பத்தாவது இறையடியார் Maria Beatrice Rosario Arroyo அவர்கள், பிலிப்பீன்ஸ் நாட்டில், புனித செபமாலையின் தொமினிக்கன் அருள் சகோதரிகள் என்ற துறவு சபையை நிறுவி, 1957ம் ஆண்டு இறையடி சேர்ந்தவர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்