19 தியோக்கோன்களை திருநிலைப்படுத்தும் திருத்தந்தை
மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்
கடவுளை நம் வாழ்வில் ஏற்பதற்கு, இதயங்களைத் திறந்து வைப்போம் என்று, இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
மே 11, இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியில், “இது இரக்கத்தின் காலம்; இது, ஆண்டவரின் பரிவன்பின் காலம், எனவே, அவர் நம்மிடம் வருவதற்கு நம் இதயங்களைத் திறந்து வைப்போம்” என்ற சொற்கள் பதிவாகியிருந்தன.
மேலும், இறையழைத்தலுக்காகச் செபிக்கும் 56வது உலக நாளாகிய, மே 12, இஞ்ஞாயிறு காலை 9.15 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் திருப்பலியில், 19 தியோக்கோன்களை அருள்பணியாளர்களாகத் திருநிலைப்படுத்துகிறார்.
பாஸ்கா கால நான்காம் ஞாயிறாகிய, நல்லாயன் ஞாயிறன்று, திருத்தந்தையர் ஒவ்வோர் ஆண்டும், தியோக்கோன்களை, அருள்பணியாளர்களாகத் திருநிலைப்படுத்துகின்றனர்.
புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், 1963ம் ஆண்டு இறையழைத்தலுக்காகச் செபிக்கும் உலக நாளை உருவாக்கினார்.
Alexandre Roulin
இன்னும், மே 11, இச்சனிக்கிழமையன்று, சுவிட்சர்லாந்து நாட்டின் Lausanne பல்கலைக்கழக, உயிரியல் துறை பேராசிரியர் Alexandre Roulin அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, வத்திக்கானில் சந்தித்து கலந்துரையாடினார்.
Alexandre Roulin அவர்கள், இயற்கையைப் பாதுகாத்தல் என்பதை மையப்படுத்தி, இஸ்ரேல், பாலஸ்தீனம், மற்றும் ஜோர்டன் சமுதாயங்களுக்கிடையே ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் திட்டத்தில் 2009ம் ஆண்டிலிருந்து ஈடுபட்டு வருகிறார். இயற்கையோடு மனிதரை ஒப்புரவாக்குதல் என்பது இவரின் நோக்கமாகும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்