மே 9ம் தேதி, இலாத்தரன் பசிலிக்காவில் ரோமா இனத்தைச் சேர்ந்த குடும்பத்தினரைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் மே 9ம் தேதி, இலாத்தரன் பசிலிக்காவில் ரோமா இனத்தைச் சேர்ந்த குடும்பத்தினரைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் 

குடும்பங்களின் உலக நாளுக்கு திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

"ஒவ்வொரு தனி மனிதருக்கும், படைப்பு அனைத்திற்கும் வழங்கப்படும் அக்கறை, குடும்பத்தின் முன்னேற்றம் என்ற கருத்தை வளர்ப்பதன் பொருள்"

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மே 15, இப்புதனன்று, குடும்பங்களின் உலக நாள் கொண்டாடப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பங்களை மையப்படுத்தி, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

"ஒவ்வொரு தனி மனிதருக்கும், படைப்பு அனைத்திற்கும் வழங்கப்படும் அக்கறை, குடும்பத்தின் முன்னேற்றம் என்ற கருத்தை வளர்ப்பதன் பொருள்" என்ற சொற்களை, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியில் பதிவு செய்திருந்தார்.

மேலும், இரண்டாம் ஜான்பால் பாப்பிறை நிறுவனம், குடும்பங்களை மையப்படுத்தி, மே 13 இத்திங்கள் முதல், 15 இப்புதன் முடிய உரோம் நகரில் முதல்முறையாக ஏற்பாடு செய்திருந்த ஒரு பன்னாட்டு கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் புதன் மறைக்கல்வி உரைக்குப் பின்னர் தனிப்பட்ட முறையில் வாழ்த்தினார்.

மே 15, இப்புதனன்று குடும்பங்களின் உலக நாள் சிறப்பிக்கப்பட்டதையும், குடும்பங்கள் மற்றும் படைப்பின் பாதுகாப்பு என்பது, இவ்வாண்டு சிறப்பிக்கப்பட்ட உலக நாளுக்கு, மையப்பொருளாக அமைந்தது என்பதையும், திருத்தந்தை குறிப்பிட்டுப் பேசினார்.

இதற்கிடையே, நமது பார்வையை இறைவன் மீதும், இலத்தீன் அமேரிக்கா, மற்றும் கரீபியன் பகுதிகளில் வாழும் மக்கள் மீதும் திருப்புவது அவசியம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலத்தீன் அமெரிக்க ஆயர்களிடம் கூறினார்.

CELAM என்றழைக்கப்படும் இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவைகளின் பொது அமர்வு, ஹொண்டூராஸ் நாட்டின் Tegucigalpa நகரில், மே 13, இத்திங்கள் ஆரம்பமானதையடுத்து, இக்கூட்டத்திற்கு, திருத்தந்தை அனுப்பிய செய்தி, மே 14, இச்செவ்வாயன்று வாசிக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 May 2019, 15:47