மடகாஸ்கர் நாட்டில் திருத்தூதுப் பயண ஏற்பாடுகள் ஆரம்பம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
இவ்வாண்டு செப்டம்பர் மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மடகாஸ்கர் நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதையொட்டி, அதற்கான தயாரிப்புப் பணிகள் ஏற்கனவே துவங்கியுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் திருத்தூதுப் பயணத்தின்போது திறந்தவெளியில் திருப்பலி நிறைவேற்றவிருக்கும் Soamandrakizay பகுதிக்கு தலத்திருஅவை அதிகாரிகளுடன், கடந்த வார இறுதியில் சென்று பார்வையிட்ட மடகாஸ்கர் அரசுத் தலைவர் Andry Rajoelina அவர்கள், அப்பகுதியில் கட்டுமானப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்று கூறினார்.
அன்னைமரியாவின் பிறப்புத் திருவிழாவான, செப்டம்பர் 8ம் தேதி ஞாயிறன்று, மடகாஸ்கரில் திருத்தந்தை நிறைவேற்ற உள்ள திருப்பலியில் பெரும் எண்ணிக்கையில் விசுவாசிகள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுவதால் பிரம்மாண்ட ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், 1989ம் ஆண்டு மடகாஸ்கரில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட முப்பது ஆண்டுகளுக்குப்பின், இவ்வாண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருப்பயணம் அந்நாட்டில் இடம்பெற உள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்