நெகோம்போ புனித செபஸ்தியார் ஆலயம் நெகோம்போ புனித செபஸ்தியார் ஆலயம் 

இயேசு கொணர்ந்த வெற்றியை நம் வாழ்விற்குள் வரவேற்போம்

திருத்தந்தை : இயேசுவின் காலியான கல்லறையைக் குறித்து தியானித்துக் கொண்டிருக்கும் வேளையில், 'திகிலுற வேண்டாம். அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்' என்ற வார்த்தைகள் நம் காதில் விழுகின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

இலங்கையின் குண்டுவெடிப்புகளால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து தன் உயிர்ப்பு விழா செய்தியிலும், பின்னர் திங்கள் தின அல்லேலூயா வாழ்த்தொலி உரையிலும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்கள் தின டுவிட்டர் செய்தியிலும் அது குறித்து எழுதியுள்ளார்.

'உயிர்ப்பு ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இலங்கையின் கிறிஸ்தவ சமூகத்துடன், செபத்தில் மீண்டும் இணைவோம். இறந்தோரையும், காயமடைந்தோரையும், மக்கள் அடைந்துவரும் அனைத்து துன்பங்களையும், உயிர்த்த கிறிஸ்துவிடம் ஒப்படைப்போம்' என இத்திங்களன்று வெளியிட்ட முதல் டுவிட்டரில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திங்களன்று வெளியான இரண்டாவது டுவிட்டரில், 'பாவம் மற்றும் மரணத்தின் மீது இயேசு கண்ட வெற்றியை நம் வாழ்விற்குள் வரவேற்போம். அதன் வழியாக, இயேசுவின் உருமாற்றும் வல்லமையை அனைத்து படைப்பிற்கும் நாம் கொணரமுடியும்' என எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள முதல் டுவிட்டரில், இயேசுவின் காலியான கல்லறையைக் குறித்து தியானித்துக் கொண்டிருக்கும் வேளையில், 'திகிலுற வேண்டாம். அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்' என்ற வார்த்தைகள் நம் காதில் விழுகின்றன, என எழுதியுள்ளார்.

 உயிர்ப்பு ஞாயிறன்று திருத்தந்தை வெளியிட்டுள்ள இரண்டாவது டிவிட்டரில், 'இயேசுவின் உயிர்ப்பே இவ்வுலகின் உண்மையான நம்பிக்கை. உங்களனைவருக்கும் உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துக்கள்' என எழுதியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 April 2019, 15:47