இத்தாலிய  கால்பந்தாட்ட தேசிய கழகத்தின் உறுப்பினர்களுடன் இத்தாலிய கால்பந்தாட்ட தேசிய கழகத்தின் உறுப்பினர்களுடன் 

இத்தாலிய கால்பந்தாட்ட கழகத்தினரை சந்தித்த திருத்தந்தை

விளையாட்டுத் துறையில் தீர்க்கமான முடிவுகளும், பயிற்சிகளும் மட்டும் போதாது, மாறாக, தோல்விகளை பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் தேவை - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கால்பந்தாட்டத்தில் ஆர்வமுடையோரை, குறிப்பாக, இளையோரை, குழுக்களாக இணைத்து, அவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கும் இத்தாலிய தேசிய கழகத்தின் உறுப்பினர்களுக்கு, ஏப்ரல் 15, இத்திங்களன்று காலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

கால்பந்தாட்டத்தை, தொழில் வழியாக அல்லாமல், பகுதி நேரமாகக் கொண்டுள்ள அமைப்புக்களை ஒருங்கிணைக்கும் இத்தாலிய தேசியக் கழகத்தின் ஏறத்தாழ 120 பிரதிநிதிகளை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொழுதுபோக்கு, மகிழ்வுக்கும், தனிமனித வளர்ச்சிக்கும், ஒருவர் ஒருவரிடையே உருவாகும் உறவை வலுப்படுத்தவும் உதவும் விளையாட்டில் ஆர்வமுடையோரை சந்திப்பதில் தான் மகிழ்வதாகக் கூறினார்.

வேகமாகச் செல்லவும், விரைவான மாற்றங்களை மேற்கொள்ளவும் நம்மை உந்தித்தள்ளும் இன்றைய உலகில், ஒரு குறிக்கோளுடனும், தோல்வியில் துவளாமல் ஓடவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய திருத்தந்தை, விளையாட்டுத் துறையில் தீர்க்கமான முடிவுகளும், பயிற்சிகளும் மட்டும் போதாது, மாறாக, தோல்விகளை பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் தேவை என்பதை எடுத்துரைத்தார்.

நம்மை எதிர்த்து விளையாடுவோரையும் மதிக்கவேண்டும் என்பதைக் கற்றுத்தரும் விளையாட்டுத் துறை, விளையாட்டுத் திடல்களில், பிறரைச் சந்திப்பது, அவர்கள் விடுக்கும் சவால்களைச் ஏற்பது, மற்றும் விளையாட்டு விதிகளை மதிப்பது ஆகியவற்றுடன் கூடிய ஒரு மகிழ்வான நிகழ்வை நமக்கு வழங்குகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

இத்தாலிய தேசியக் கழகம், 12,000த்திற்கும் அதிகமான குழுக்களையும், அவற்றில் இணைந்துள்ள பத்து இலட்சத்திற்கும் அதிகமான இளையோரையும் கொண்ட ஓர் அமைப்பாகும் என்பதும், இக்கழகம், தன் 60ம் ஆண்டு நிறைவை சிறப்பிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 April 2019, 15:26