திருத்தந்தையின் திங்கள் தின அல்லேலூயா வாழ்த்தொலி உரை - 22-0419 திருத்தந்தையின் திங்கள் தின அல்லேலூயா வாழ்த்தொலி உரை - 22-0419 

இயேசுவின் காலியான கல்லறை நோக்கி அழைப்பு

ஆண்கள், மாடியறையில், அச்சத்துடன் அமர்ந்திருக்க, பெண்களே, கல்லறைக்கு முதலில் சென்று, உயிர்ப்புக்கு, முதல் சாட்சிகளாக இருந்தனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

பாவம் மற்றும் மரணத்தின்மீது கொள்ளப்பட்ட உயிர்ப்பு எனும் வெற்றி, மனித வரலாற்றிற்கே ஓர் அதிர்ச்சியை தந்த நிகழ்வு என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று  வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் கூறினார்.

வாரத்தின் முதல் நாளில் கல்லறைக்குச் சென்ற பெண்களைப் பார்த்து, வெண்ணிற உடை அணிந்த இரு வானதூதர்கள், “உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்? அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்' எனக் கூறியதை எடுத்தியம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த நிகழ்வையே நாம் நேற்று கொண்டாடினோம், அதுவே, இன்றும், இவ்வாரம் முழுவதும், நம்மைத் தொடர்ந்து வருகிறது என மேலும் கூறினார்.

வானதூதரின் திங்கள் என அழைக்கப்படும் இந்நாளின் திருவழிபாடு, நம்மை மீண்டும் இயேசுவின் காலியான கல்லறை நோக்கி அழைத்துச் செல்கிறது, அங்கு அச்சமும் மகிழ்ச்சியும் கலந்த நிலையில், இயேசுவின் உயிர்ப்பு குறித்து சீடர்களிடம் எடுத்துச் சொல்ல சென்ற பெண்களை இயேசுவே எதிர்கொள்வதை நாம் காண்கிறோம் என்றார் திருத்தந்தை.

ஆண்கள், மாடியறையில், அச்சத்துடன் அமர்ந்திருக்க, பெண்களே, கல்லறைக்கு முதலில் சென்று, உயிர்ப்புக்கு, முதல் சாட்சிகளாக இருந்தனர் என்று கூறியத் திருத்தந்தை, அன்று இயேசு பெண்களை நோக்கி, 'அஞ்சாதீர்கள், நீங்கள் போய் அறிவியுங்கள்....' என்று கூறிய அதே வார்த்தைகளை நம்மை நோக்கியும் கூறுகிறார். உயிர்த்து உயிருடன் வாழும் இறைமகனை, நம் விசுவாசக் கண்கொண்டு தியானிப்பதுடன், இயேசுவின் உயிர்ப்புக்கு சாட்சிகளாகவும், அதை அறிவிப்பவர்களாகவும் செயல்படும் அழைப்பைப் பெற்றுள்ளோம் என்பதையும் உணரவேண்டும் என்றார்.

சாவிலிருந்து வாழ்வுக்கும், பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து அன்பின் விடுதலைக்கும் நாம் இயேசுவில் உயிர்த்துள்ளோம், உயிர்த்த இயேசு நம்மோடு நடைபோடுகின்றார் எனவும் எடுத்துரைத்து, அன்னை மரியாவின் பரிந்துரையை வேண்டி, தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையை நிறைவுச் செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 April 2019, 12:37