தேடுதல்

புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தின் மேல் மாடத்திலிருந்து திருத்தந்தை வழங்கிய ‘ஊர்பி எத் ஓர்பி’ ஆசீர் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தின் மேல் மாடத்திலிருந்து திருத்தந்தை வழங்கிய ‘ஊர்பி எத் ஓர்பி’ ஆசீர் 

2019 உயிர்ப்புப் பெருவிழா – ‘ஊர்பி எத் ஓர்பி’ செய்தி

உயிர்ப்பு நாள் காலையில், எனது அண்மை திருத்தூது அறிவுரை ஏட்டின் முதல் வார்த்தைகளான, “கிறிஸ்து வாழ்கிறார்!” என்ற சொற்களில், உங்கள் ஒவ்வொருவரையும் வாழ்த்த விரும்புகிறேன்.

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

“இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார்!” என்று, முதல் சீடர்கள் முழங்கியதை, இன்று திருஅவை புதுப்பிக்கின்றது. “அல்லேலூயா, அல்லேலூயா!” என்ற வாழ்த்து, ஒவ்வொரு சொல்லிலும், இதயத்திலும் எதிரொலிக்கின்றது. இந்த உயிர்ப்பு நாள் காலையில், என்றும் இளமையாய் இருக்கின்ற திருஅவைக்கும், மனித சமுதாயம் அனைத்திற்கும், இளையோர்க்கென அர்ப்பணிக்கப்பட்ட, எனது அண்மை திருத்தூது அறிவுரை ஏட்டின் முதல் வார்த்தைகளான, “கிறிஸ்து வாழ்கிறார்!” என்ற சொற்களில், உங்கள் ஒவ்வொருவரையும் வாழ்த்த விரும்புகிறேன்.

இளையோரிடம் கிறிஸ்து வாழ்கிறார்!

கிறிஸ்து வாழ்கிறார்! அவரே நம் நம்பிக்கை. வியப்பான முறையில் அவர் இளமையை நம் உலகுக்குக் கொணர்கிறார். அவர் தொடுகின்ற ஒவ்வொன்றும், இளமையாக, புதியதாக, முழுமையான வாழ்வாக மாறுகின்றன. கிறிஸ்து வாழ்கிறார்! மற்றும் நீங்கள் உ.யிர்த்துடிப்புடன் வாழ வேண்டுமென, ஒவ்வோர் இளம் கிறிஸ்தவர்களுக்கும் நான் சொல்ல விரும்புகிறேன். அவர் உங்களில் இருக்கின்றார், அவர் உங்களோடு இருக்கின்றார் மற்றும் அவர் ஒருபோதும் உங்களைக் கைவிடமாட்டார். நீங்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், அங்கே, உயிர்த்தெழுந்த கிறிஸ்து எப்போதும் இருக்கின்றார். அவர் உங்களை அழைக்கின்றார். தம்மிடம் திரும்பிவந்து, வாழ்வை மீண்டும் தொடங்க வேண்டுமென, அவர் உங்களுக்காகக் காத்திருக்கிறார். துயரத்தால், சினத்தால் அல்லது அச்சத்தால், சந்தேகத்தால் அல்லது தோல்வியால், நீங்கள் வயது முதிர்ந்ததைப்போல் உணரும்போது, உங்கள் வலிமையையும், உங்கள் நம்பிக்கையையும் நிலைநிறுத்த, அவர் எப்போதும் அங்கே இருக்கின்றார். (Christus Vivit, 1-2).

அன்புச் சகோதரர், சகோதரிகளே, இந்தச் செய்தி, உலகிலுள்ள ஒவ்வொரு மனிதருக்குமெனவும் வழங்கப்படுகின்றது. கிறிஸ்துவின் உயிர்ப்பு, ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணின் புது வாழ்வின் மற்றும், இதயத்திலிருந்து, மனச்சாட்சியிலிருந்து தொடங்கும் உண்மையான புதுப்பித்தலின் கோட்பாக அமைந்துள்ளது. மேலும், கிறிஸ்துவின் உயிர்ப்பு, பாவம் மற்றும் மரணத்தின் அடிமை நிலையிலிருந்து விடுவிக்கும், புதிய உலகின் தொடக்கமாகவும் அமைந்துள்ளது. அப்புதிய உலகம், அன்பு, அமைதி மற்றும் உடன்பிறப்பு உணர்வின், மற்றும் என்றும் நிலைத்திருக்கும் இறையாட்சிக்கும் வழி திறக்கின்றது.  

கிறிஸ்து வாழ்கிறார்! அவர் நம்மோடு இருக்கின்றார். அவர் தம் உயிர்ப்பால், தம் திருமுகத்தின் ஒளியை நமக்குக் காட்டுகின்றார். கடினவாழ்வு, வேதனை மற்றும் துன்பங்களை அனுபவிக்கும் அனைவரையும் அவர் கைவிடுவதில்லை.

சிரியா, மத்திய கிழக்கு மக்களுக்காக

உயிரோடு இருக்கும் அவர், தொடர்ந்து இடம்பெறும் போருக்குப் பலியாகியுள்ள, நம் அன்புக்குரிய சிரியா மக்களின் நம்பிக்கையாக இருப்பாராக. இப்போர், தீர்க்கமுடியாததென எண்ணுவதற்கும், அதனால், அக்கரையற்று போவதற்கும் நம்மை தள்ளிவிடும் ஆபத்து உள்ளது. அதற்குப் பதிலாக, புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணத்துடன் ஓர் அரசியல் தீர்வை நோக்கிச் செல்லும் நேரம் இது. அங்கு நிலவும் மனிதாபிமான பேரிடர்களைக் களைந்து, அம்மக்கள் தங்கள் சொந்த இல்லங்களுக்குத் திரும்பவும், குறிப்பாக, லெபனான், ஜோர்டான் நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த சிரியா மக்கள் நாடு திரும்பவும் இது தகுந்த நேரம்.

மத்தியக் கிழக்குப் பகுதி மக்கள்

உயிர்ப்பு விழா, தொடரும் பிளவுகளாலும், மோதல்களாலும் சிதைந்துள்ள மத்தியக் கிழக்குப் பகுதியின் மீது நம் கண்களைப் பதிக்க வைக்கிறது. சாவை வென்று, வாழ்வாக உயிர்த்த ஆண்டவரின் சாட்சிகளாக வாழ்வதில், அப்பகுதியில் வாழும் மக்கள், விளங்குவார்களாக! போரினாலும், பட்டினியாலும் களைப்படைந்துள்ள ஏமன் நாட்டு மக்களை, குறிப்பாக, குழந்தைகளை நான் எண்ணிப்பார்க்கிறேன். உயிர்ப்பின் ஒளி, அப்பகுதியில் உள்ள அரசியல் தலைவர்கள் மீது, குறிப்பாக, இஸ்ரேல், பாலஸ்தீனிய தலைவர்கள் மீது ஒளிர்ந்து, அவர்கள், அமைதியின் பாதையை தெரிவு செய்ய உதவுவதாக.

தங்கள் இல்லங்களைவிட்டு மக்கள் வெளியேறும் வண்ணம், லிபியாவில் நிகழ்ந்துவரும் மோதலும், இரத்தம் சிந்தலும், நின்று,  அங்குள்ள தலைவர்கள், உரையாடல் முயற்சிகளை மேற்கொள்வார்களாக!

அன்புக்குகந்த ஆப்ரிக்க கண்டம்

அன்புக்குகந்த ஆப்ரிக்க கண்டம் முழுவதற்கும் வாழும் கிறிஸ்து அமைதியை வழங்குவாராக. குறிப்பாக, புர்கினா பாசோ, மாலி, நைஜர், நைஜீரியா மற்றும் காமரூன் நாடுகளில் நிலவிவரும் வன்முறைகள் அகல்வதாக. அரசியல் நிலையற்ற தன்மை கொண்ட சூடான் நாட்டை எண்ணிப்பார்க்கிறேன். அந்த நாடு சுதந்திரம் மற்றும் முன்னேற்றம் அடைய அனைவரும் உழைப்பார்களாக.

தென் சூடான் நாட்டு அரசியல் மற்றும் மதத் தலைவர்கள், அண்மையில், வத்திக்கானில் மேற்கொண்ட ஆன்மீக தியானத்திற்குப் பின், அவர்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளில் உயிர்த்த ஆண்டவர் துணை இருப்பாராக. அந்த நாட்டில் திறக்கப்பட்டிருக்கும் வரலாற்றின் புதிய பக்கம், பொதுவான நன்மை, ஒப்புரவு நோக்கி செல்வதாக.

தொடர்ந்து வரும் மோதல்களால் துன்புறும் உக்ரைன் பகுதி மக்களுக்கு இந்த உயிர்ப்பு விழா ஆறுதலைக் கொணரட்டும். அங்கு நிலையான அமைதியையும், மனிதாபிமான முயற்சிகளையும் மேற்கொள்ள இறைவன் அனைவரையும் தூண்டுவாராக.

அமெரிக்க கண்டத்தில் துன்புறும் மக்கள்

அமெரிக்க கண்டத்தில், அரசியல் மற்றும் பொருளாதார இன்னல்களைச் சந்தித்துவரும் மக்களின் உள்ளங்களில் உயிர்ப்பின் மகிழ்வு நிறையட்டும். அடிப்படைத் தேவைகள், மனித மாண்பு, பாதுகாப்பு ஆகியவற்றை இழந்து தவிக்கும் வெனிசுவேலா மக்களை குறிப்பாக இவ்வேளையில் நினைவுகூருகிறேன். அரசியல் பொறுப்பில் உள்ள அனைவரும் அந்நாட்டில் நிலவும் அநீதி, வன்முறை ஆகியவற்றை நீக்க உதவுவார்களாக.

நிக்கராகுவா நாட்டில் அமைதி நிலவ உழைத்துவரும் அனைவர் மீதும் உயிர்த்த ஆண்டவர் தன் ஒளியை வீசுவாராக.

பாலங்களை அமைப்பவர்களாக...

இன்றைய காலத்தில் நிலவும் துன்பங்களுக்கு முன், நாம் அக்கறையற்று போகாமல் இருக்க, வாழ்வின் இறைவன் உதவட்டும். சுவர்களை அல்ல, பாலங்களை அமைப்பவர்களாக நம்மை உருவாக்கட்டும். போர்க்களங்களிலும், நமது பெருநகரங்களிலும் கொலைக் கருவிகளின் ஓசையை நிறுத்தும் அமைதியை அவர் வழங்கட்டும். கல்லறையின் கதவுகளைத் திறந்த உயிர்த்த கிறிஸ்து, நமது உள்ளங்களையும் திறப்பாராக. நமது கதவுகளைத் தட்டும் வறியோர், வலுவற்றோர், வேலையற்றோர், சமுதாயத்தின் ஓரங்களில் வாழ்வோர் ஆகியோருக்கு உதவிகள் செய்ய வரமளிப்பாராக.

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, கிறிஸ்து வாழ்கிறார்! அவரே நமக்கும், இவ்வுலகமனைத்திற்கும் நம்பிக்கையாய் இளமையாய் விளங்குகிறார். அவர் நம்மைப் புதுப்பிக்க நம்மையே வழங்குவோம்! உயிர்ப்புப் பெருவிழா நல் வாழ்த்துக்கள்!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 April 2019, 14:15