தேடுதல்

திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருத்தந்தை பிரான்சிஸ்  

கடந்த நூற்றாண்டில் புனித யோசேப்பும், திருத்தந்தையரும்

மார்ச் 19, இச்செவ்வாய், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் நாமவிழா. யோசேப் இராட்சிங்கர் என்ற திருமுழுக்குப் பெயர்கொண்ட திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்காகச் செபிப்போம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இயேசுவின் வளர்ப்புத் தந்தையான புனித யோசேப், கடந்த நூறு ஆண்டுகளில் திருத்தந்தையரின் தனிப்பட்ட வாழ்விலும், தலைமைப் பணிகளிலும், முக்கிய இடத்தைக் கொண்டிருக்கின்றார் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.

திருஅவையின் முதல் திருத்தந்தையான திருத்தூதர் புனித பேதுருவுக்குப் பின்னர், பல திருத்தந்தையர், ஜான், பெனடிக்ட், பவுல், கிரகரி போன்ற பெயர்களையே தேர்ந்தெடுத்தனர், ஆயினும், கடந்த நூற்றாண்டில், பல திருத்தந்தையர், தங்களின் திருமுழுக்குப் பெயராக, புனித யோசேப் பெயரைக் கொண்டிருந்தனர்.

இருபதாம் நூற்றாண்டு துவக்கத்தில், திருத்தந்தையாகத் தலைமைப்பணியாற்றிய பத்தாம் பயஸ் அவர்களின் இயற்பெயர், ஜூசப்பே மெல்கியோரே சார்த்தோ. புனித 23ம் ஜான் அவர்களின் இயற்பெயர், ஜூசப்பே ரொங்காலி. புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் இயற்பெயர், கரோல் யோசேப் வொய்த்தில்யா. முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் இயற்பெயர், யோசேப் இராட்சிங்கர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இயற்பெயர் யோசேப் இல்லையெனினும், அவர் கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப்பணியை, மார்ச் 19ம் தேதி, புனித யோசேப்பின் விழாவன்றே துவக்கினார்.

புனித யோசேப் விழா

திருத்தந்தை 5ம் பயஸ் அவர்கள், 1570ம் ஆண்டில், புனித யோசேப் விழாவை, மார்ச் 19ம் தேதி என அறிவித்து, திருவழிபாட்டில் புனித யோசேப் பக்தியை ஆரம்பித்தார். 1870க்கும், 1955ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், புனித யோசேப், கன்னி மரியின் கணவர் மற்றும் உலகளாவியத் திருஅவையின் பாதுகாவலர் எனச் சிறப்பிக்கப்பட்டது. பின்னாளில், திருத்தந்தை 9ம் பயஸ் அவர்கள், புனித யோசேப், உலகளாவியத் திருஅவையின் பாதுகாவலர் என அறிவித்தார்.

திருப்பலியில், நற்கருணை மன்றாட்டுச் செபங்கள் இரண்டு, மூன்று மற்றும் நான்கில், புனித கன்னி மரியின் கணவரான புனித யோசேப்பின் பெயர் இணைக்கப்பட வேண்டும் என்று, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் அறிவித்தார். இதனை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2013ம் ஆண்டு மே முதல் தேதியன்று உறுதி செய்தார்.

புனித 23ம் ஜான் அவர்கள், 1962ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி, பழங்கால உரோமன் திருப்பலி முறைமையில், நற்கருணை மன்றாட்டுச் செபத்தில், புனித யோசேப்பின் பெயரை இணைத்தார். இத்திருத்தந்தை, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை, இயேசுவின் இம்மண்ணகத் தந்தையான புனித யோசேப்பிற்கு அர்ப்பணிக்க விரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 March 2019, 15:35