கமிலியன் துறவு குழுமத்தினர் சந்திப்பு கமிலியன் துறவு குழுமத்தினர் சந்திப்பு 

தன்னலமற்ற சேவை வழியாக, பிறருக்கு எடுத்துக்காட்டு

யாராவது ஒருவர் தனக்கருகே அமர்ந்திருக்க மாட்டாரா என ஏங்கும் இதயங்களின் அருகில், அவர்களின் கடைசிக் காலங்களில் அமர்ந்து ஆறுதலளிக்கும் துறவுக் குழுமம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

துன்புறுவாரோடு, குறிப்பாக, நோயுற்றவரோடு உடனிருந்து சிறப்புப் பணியாற்றிவரும் கமிலியன் துறவு குழுமத்திற்கு, தன் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவிப்பதாக அறிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கமிலியன் துறவுக் குழுமத்தின் பிரதிநிதிகள் குழுவை இத்திங்கள் காலை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நோய்களால் பாதிக்கப்பட்டு, யாராவது ஒருவர் தனக்கருகே அமர்ந்திருக்க மாட்டாரா என ஏங்கும் இதயங்களின் அருகில், அவர்களின் கடைசிக் காலங்களில் அமர்ந்து ஆறுதலளிக்கும் கமிலியன் துறவுக் குழுமத்தின் பணிகளைப் பாராட்டினார்.

நோயுற்றோர், குறிப்பாக, ஏழைகள், உடலளவில் மட்டுமல்ல, ஆன்மீக அளவிலும் குணம் பெற உதவும் இந்தக் குழுமத்தினர், தங்களின் தன்னலமற்ற சேவை வழியாக, இச்சமூகத்திற்கு சேவையாற்ற விழையும் பிறருக்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டாகவும் உள்ளனர் என்றார், திருத்தந்தை.

ஒருவருக்கு இறைவனால் கொடுக்கப்படும் தனிவரம், இறைமக்களின் நலனுக்கென பயன்படுத்தப்பட வேண்டியது என்பதை மனதில் கொண்டு, உலகின் பல நாடுகளில், பல்வேறு வழிகளில் பணியாற்றிவரும் கமிலியன் குழுமத்தினர், புனிதத்துவத்தின் எடுத்துக்காட்டுகளாகவும் செயல்பட்டு வருகின்றனர் என, மேலும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 March 2019, 16:12