மறைக்கல்வியுரையின்போது....270319 மறைக்கல்வியுரையின்போது....270319 

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை– 'இன்றைய உணவை எங்களுக்குத் தாரும்

'விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே' என்ற செபத்தில், பிறர் தேவைகளுக்காக செபிப்பதன் வழியாக, அது, ஒருமைப்பாடு, மற்றும், பிறர் உணர்வை புரிந்து செயல்படுவதன் செபமாக மாறுகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இப்புதன் காலையில் வத்திக்கான் புனித பேதுரு பேராலய வளாகம் திருப்பயணிகளால் நிரம்பியிருக்க, திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வியுரை, 'விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே' என்ற செபம் குறித்த விளக்கவுரையுடன் துவங்கியது. 'இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும்', என்ற விண்ணப்பம் குறித்து, திருத்தந்தையின் உரை இருந்தது.

முதலில், மத்தேயு நற்செய்தி 14ம் பிரிவிலிருந்து, பின்வரும் பகுதி வாசிக்கப்பட்டது:

மத்தேயு நற்செய்தி 14:15-19

மாலையானபோது, சீடர் அவரிடம் வந்து, “இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, நேரமும் ஆகிவிட்டது. ஊர்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான உணவு வாங்கிக்கொள்ள மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்” என்றனர். இயேசு அவர்களிடம், “அவர்கள் செல்ல வேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்றார். ஆனால் அவர்கள் அவரைப் பார்த்து, “எங்களிடம் இங்கே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை” என்றார்கள். அவர், “அவற்றை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள்” என்றார். மக்களைப் புல்தரையில் அமருமாறு ஆணையிட்டார். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்.

இதைத் தொடர்ந்து, திருத்தந்தை தன் மறைக்கல்வி உரையை வழங்கினார்.

அன்பு சகோதர சகோதரிகளே, 'விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே' என்ற நம் தொடர் மறைக்கல்வியுரையில் 'இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும்' என்ற பகுதியை இன்று சிந்திப்போம். இந்த செபத்தின் இரண்டாம் பகுதியாகிய இது, நம் தேவைகளை இறைவன் முன் வைப்பதாக உள்ளது. இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும் என்ற வேண்டுதல், நம்முடைய தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் வகையில் நாம் முற்றிலும் தன்னிறைவு பெற்றவர்களாக இல்லை என்ற உண்மை நிலையை உணர்த்தி நிற்கின்றது. இந்த உண்மை நிலையை, பலவேளைகளில் நாம் மறந்துவிடுகிறோம். நமக்கு தினமும் உணவு தேவைப்படுகிறது. இருப்பினும், இந்த செபத்தை, தினமும் தங்கள் அத்தியாவசிய அடிப்படை தேவைகளை நிறைவுச் செய்ய போராடி துன்புறும் அனைத்து மக்களோடும் இணைந்து எழுப்புமாறு, இயேசு நம்மிடம் கேட்கிறார். இதே கண்ணோட்டத்தோடு நாம் பார்க்கும்போது, இயேசுவின் வார்த்தைகள் மேலும் வலுவுள்ளதாக இருப்பதைக் காண்கிறோம். கிறிஸ்தவ செபம் என்பது, துறவிகளுக்கும், தவ வாழ்வு வாழ்பவர்களுக்கும் மட்டும் உரியதல்ல, மாறாக, சாதாரண மக்களின் தேவைகளை ஒட்டி உருவானது என்பதை உணர்கிறோம். இன்றைய உணவு என இங்கு நாம் செபத்தில் குறிப்பிடுவது, தனி ஒரு மனிதருக்கான உணவையல்ல, மாறாக, நம் அனைவருக்குமான உணவை. நமக்காக மட்டும் செபிக்கச் சொல்லவில்லை இயேசு; மாறாக, நம் சகோதர சகோதரிகளுக்காகவும் இணைந்து செபிக்கச் சொல்கிறார்.  இவ்வாறு நாம் செபிப்பதன் வழியாக, 'விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே' என்ற இந்த செபம், ஒருமைப்பாட்டின், மற்றும், பிறர் உணர்வை புரிந்துகொண்டு செயல்படுவதன் செபமாக மாறுகிறது.  மற்றவர்களுக்கு உதவி புரிவதற்கான நம் ஆவலை, இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த புதுமையிலும் காண்கிறோம். இந்தப் புதுமையில், இயேசு, திருநற்கருணை அப்பத்தில், தன்னை, இறுதி நாளில் வழங்கியதை, இங்கு முதலிலேயே காட்டுகின்றார். ஏனெனில், திருநற்கருணை மட்டுமே, இறைவனுக்கான நம் பசியை நிறைவுச் செய்ய முடியும்.

மறைக்கல்வியுரையின் இறுதியில், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 March 2019, 11:40