லொரெட்டோ அன்னை மரியா திருத்தலத்தில் பாப்பிறை லொரெட்டோ அன்னை மரியா திருத்தலத்தில் பாப்பிறை 

லொரெத்தோ அன்னை மரியா திருத்தலம்

லொரேத்தோ அன்னைமரித் திருத்தலத்துக்கு, இனம், மதம், மொழி, நாடு என்ற பாகுபாடின்றி, ஆண்டுதோறும் ஏறக்குறைய நாற்பது இலட்சம் திருப்பயணிகள் செல்கின்றனர்

மேரி தெரேசா - வத்திக்கான்

இத்தாலியின் மத்திய பகுதியிலுள்ள மார்க்கே மாநிலத்தில் முசோனே ஆற்றின் வலது கரையில் அட்ரியாடிக் கடலுக்கு ஏறத்தாழ மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சிறிய நகரம் லொரெத்தோ. 11 ஆயிரம் மக்கள் வாழும் இந்நகரம், உரோமைக்கு வடகிழக்கில் ஏறக்குறைய 175 மைல்கள் தூரத்தில் உள்ளது. இந்நகரம், உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குவதற்கு ஒரே காரணம் அங்கு அமைந்துள்ள அன்னைமரியாத் திருத்தலமே. அதிலும், இத்திருத்தலத்துக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரு சிற்றாலயம்தான் இப்புகழுக்குக் காரணம். இதை ஆலயம் என்று சொல்வதைவிட, வீடு என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் எருசலேமுக்கு அருகிலுள்ள நாசரேத்தின் புனித வீடுதான் இந்தச் சிற்றாலயம் என்று நம்பப்படுகின்றது. இந்த வீட்டில்தான் புனித கன்னி மரியாவுக்கு இயேசு பிறப்பு குறித்த மங்களச் செய்தியை வானதூதர் கபிரியேல் சொன்னார். நாசரேத்தில் திருக்குடும்பம் வாழ்ந்த இந்த எளிமையான வீடு செங்கற்களாலானது. இந்த வீடுதான் லொரெத்தோ நகரிலுள்ள அழகான, பெரிய பசிலிக்காவுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இயேசுவின் இவ்வுலக வாழ்வுக்குப் பின்னர் மூன்று நூற்றாண்டுகள் சென்று புதிதாகக் கிறிஸ்தவத்தைத் தழுவிய உரோமைப் பேரரசர் கான்ஸ்ட்டைன், இந்த எளிமையான வீட்டை நடுவில் வைத்து லொரெத்தோ அன்னை மரித் திருத்தலத்தைக் கட்டினார் என்பது வரலாறு. 1921ம் ஆண்டில் இந்தப் புனித வீட்டில் தீப்பற்றியதால் முதன்முதலில் வைக்கப்பட்ட அன்னைமரியா திருஉருவம் அழிக்கப்பட்டுவிட்டது. இப்போது இங்கு வைக்கப்பட்டுள்ள சிறிய கறுப்பு நிற அன்னை மரியா திருஉருவம், லெபனான் நாட்டு கேதார் மரத்தால் செய்யப்பட்டது. அது விலையுயர்ந்த ஆபரணங்களாலும் அழகுபடுத்தப்பட்டுள்ளது.

நாசரேத் புனித வீடு

லொரெத்தோவிலுள்ள நாசரேத் புனித வீடு குறித்து கத்தோலிக்க மரபில் ஒரு புதுமை சொல்லப்படுகின்றது. இந்த வீடு நாசரேத்தில் சிலுவைப்போர் காலத்தில் அழிக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கியது. எனவே 1291ம் ஆண்டில் வானதூதர்கள் இதனை தற்போதைய குரோவேஷிய நாட்டில் புதுமையாகக் கொண்டுவந்து வைத்தனர். ஏனெனில் அச்சமயத்தில் நாசரேத்தில் இவ்வீடு இருந்த இடம் திடீரெனக் காலியாக இருந்தது. அதேசமயம் அவ்வீடு குரோவேஷியாவில் காணப்பட்டது. பின்னர் அல்பேனிய முஸ்லிம்களின் ஆக்ரமிப்பினால் இவ்வீடு மீண்டும் தூதர்களால் 1294ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி இத்தாலியின் Recantiக்கு எடுத்துவரப்பட்டது. பின்னர் சிறிது காலம் சென்று, தற்போது இந்த வீடு அமைந்திருக்கும் லொரெத்தோவுக்கு எடுத்துவரப்பட்டது. இந்தப் புனித வீட்டை பல திருத்தந்தையர்கள், புனிதர்கள் உட்பட பலரும் வணங்கி வருகின்றனர். பல புதுமைகளும் இடம்பெற்று வருகின்றன. இந்த வீடு நாசரேத்தில் காணப்பட்ட வீட்டைப் போன்ற பொருள்களைக் கொண்டிருப்பதாக அறிவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். இந்தப் புனித வீடு குறித்து மேலும் சில கூற்றுக்களும் சொல்லப்படுகின்றன.

புனித பூமியிலிருந்து கிறிஸ்தவ சிலுவைப் போர் வீரர்கள் முழுவதுமாக வெளியேற்றப்படுவதற்குச் சிறிது காலத்துக்கு முன்னதாக, நாசரேத் புனித வீட்டை Angelos என்ற பிரபுக்கள் குடும்பம், லொரேத்தோவுக்கு எடுத்து வந்ததாகவும் ஒரு மரபு உள்ளது. நாம் ஏற்கனவே சொன்னது போல, வான தூதர்கள் இந்தப் புனித வீட்டின் கற்களை இங்கு கொண்டு வந்தார்கள் என்ற நம்பிக்கையும் மக்கள் மத்தியில் இருக்கிறது. இயேசு, மரியா, யோசேப்பு ஆகிய மூவரும் இறந்த பிறகு இவர்கள் வாழ்ந்த வீட்டை திருத்தூதர்கள் ஆலயமாக மாற்றினார்கள் என்றும் சொல்லப்படுகிறது. லொரேத்தோவின் புனித வீட்டைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள பிரமாண்டமான பசிலிக்கா 1469ம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்த லொரெத்தோ அன்னை மரியாவை, 1920ம் ஆண்டில் திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், விமானப் பயணம் செய்பவர்கள் மற்றும் விமான ஓட்டிகளுக்குப் பாதுகாவலராக அறிவித்தார்.

திருத்தந்தையரும், லொரேத்தோ அன்னை மரியாவும்

1957ம் ஆண்டில் திருத்தந்தை 9ம் பயஸ் அவர்கள் லொரெத்தோ நாசரேத்து புனித வீடு சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றினார். முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் அருளப்பர் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை ஆரம்பிக்கும் முன்னர் லொரெத்தோ அன்னைமரியா திருத்தலத்துக்குத் திருப்பயணம் மேற்கொண்டார். இந்த நிகழ்வின் 50ம் ஆண்டு மற்றும் திருஅவையில் தொடங்கியுள்ள நம்பிக்கை ஆண்டையொட்டி 2012ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி திருத்தந்தை 16ம் பெனடிக்ட் லொரேத்தோ அன்னைமரியா திருத்தலத்துக்குத் திருப்பயணம் மேற்கொண்டு திருஅவையை அன்னை மரியாவிடம் அர்ப்பணித்தார். அன்னை மரியாவுக்கு, ஆண்டவரின் பிறப்பு அறிவிக்கப்பட்ட விழாவாகிய, மார்ச் 25, இத்திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லொரெத்தோ சென்று, இளையோர் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத் தீர்மானங்கள் அடங்கிய, திருத்தூது அறிக்கையில் கையெழுத்திட்டு, அதனை வெளியிட்டார்.  லொரேத்தோ அன்னைமரித் திருத்தலத்துக்கு, இனம், மதம், மொழி, நாடு என்ற பாகுபாடின்றி, ஆண்டுதோறும் ஏறக்குறைய நாற்பது இலட்சம் திருப்பயணிகள் செல்கின்றனர் என்று ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 March 2019, 14:44