மொராக்கோ திருத்தூதுப் பயணத்தின் விவரங்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
மார்ச் 30, 31 ஆகிய இரு நாள்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மொராக்கோ நாட்டில் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணத்தின் விவரங்கள், பிப்ரவரி 9, இச்சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டன.
மார்ச் 30, சனிக்கிழமை காலை 10.45 மணிக்கு உரோம் நகர் பியூமிச்சீனோ விமான நிலையத்திலிருந்து புறப்படும் திருத்தந்தை, மொராக்கோ நாட்டின் Rabat Sale பன்னாட்டு விமான நிலையத்தை, உள்ளூர் நேரம் பிற்பகல் 2 மணிக்குச் சென்றடைவார்.
விமான நிலையத்தில் வழங்கப்படும் வரவேற்பில் பங்கேற்கும் திருத்தந்தை, அந்நாட்டு அரசர் 6ம் முகம்மது அவர்களையும், அதன் பின்னர், அரசு அதிகாரிகளையும் சந்தித்து, தன் முதல் உரையை அங்கு வழங்குவார்.
இச்சந்திப்பிற்குப் பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரசர் 5ம் முகம்மது அவர்களின் சமாதியையும், 6ம் முகம்மது நிறுவனத்தையும் பார்வையிடுவார்.
அந்நாட்டின் காரித்தாஸ் நிறுவனத்தால் பராமரிக்கப்படும் புலம்பெயர்ந்தோரை திருத்தந்தை சந்திப்பது, மார்ச் 30ம் தேதியின் இறுதி நிகழ்வாக அமையும்.
மார்ச் 31, ஞாயிறன்று Rabat பேராலயத்தில் அருள் பணியாளர்கள், துறவியர், மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு அவை உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்தித்து, உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்று பிற்பகல், விசுவாசிகளுக்கு திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்குவார்.
ஞாயிறு மாலை 5.15 மணிக்கு மொராக்கோ விமான நிலையத்திலிருந்து புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரவு 9.30 மணிக்கு உரோம் நகர் சம்பீனோ விமான நிலையம் வந்தடைவார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்