தேடுதல்

பானமா பயணத்தை முன்னிட்டு உரோம் மேரி மேஜர் பசிலிக்கா சென்று செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ் பானமா பயணத்தை முன்னிட்டு உரோம் மேரி மேஜர் பசிலிக்கா சென்று செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ் 

சனவரி 23-28, திருத்தந்தையின் பானமா திருத்தூதுப்பயணம்

“நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும் (லூக். 1:38)” என்ற அன்னை மரியின் சொற்கள், 34வது உலக இளையோர் நாளின் தலைப்பாகும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

தானும் மகிழ்வாக வாழ்ந்து, மற்றவரையும் மகிழ்வாக வைப்பதற்கு வழிமுறையைச் சொல்லியிருக்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“கடவுளின் அன்புக்கு ஆகட்டும் எனச் சொல்வது, மகிழ்வாக வாழ்வதற்கும், பலரை மகிழ்ச்சிப்படுத்துவதற்கும் முதல் படி” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், சனவரி 22, இச்செவ்வாயன்று இடம்பெற்றிருந்தன.

திருத்தந்தையின் பானமா திருத்தூதுப்பயணம்

மத்திய அமெரிக்க நாடான பானமாவில், சனவரி 22, இச்செவ்வாயன்று தொடங்கியுள்ள, 34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக, சனவரி 23, இப்புதனன்று, பானமா செல்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ். இப்பயணத்தை முன்னிட்டு, இச்செவ்வாய் காலையில், உரோம் மேரி மேஜர் பசிலிக்கா சென்று செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்புதன் உரோம் நேரம் காலை 8.55 மணிக்கு, வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து உரோம் பியூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திற்கு காரில் சென்று, 9.35 மணிக்கு பானமாவுக்குப் புறப்படுவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

12 மணி 55 நிமிடங்கள் விமானப் பயணம் செய்து, பானமா நகர் Tucmen பன்னாட்டு விமான நிலையத்தை, அந்நாட்டு நேரம் மாலை 4.30 மணியளவில், அதாவது இந்திய நேரம், சனவரி 24, இவ்வியாழன் அதிகாலை மூன்று மணியளவில் சென்றடையும் திருத்தந்தையை, பானமா அரசுத்தலைவர், அரசு பிரமுகர்கள், ஆயர்கள் மற்றும் ஏறக்குறைய இரண்டாயிரம் விசுவாசிகள் வரவேற்பார்கள். பின்னர், பானமா திருப்பீட தூதரகம் சென்று இரவு உணவருந்தி உறங்கச் செல்வார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 24, இவ்வியாழனிலிருந்து பானமாவில் தனது திருத்தூதுப்பயண நிகழ்வுகளைத் தொடங்குவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் உள்ளூர் நேரம் 7.45 மணிக்கு, பானமா திருப்பீட தூதரகத்தில் திருப்பலி நிறைவேற்றிய பின்னர், காலை உணவை முடித்து, 9.30 மணிக்கு, அதாவது இந்திய நேரம், இவ்வியாழன் இரவு எட்டு மணிக்கு பானமா அரசுத்தலைவர் மாளிகைக்குச் சென்று அரசுத்தலைவரைச் சந்திப்பதுடன் இத்திருத்தூதுப்பயணத்தின் நிகழ்வுகள் தொடங்கும்.

சனவரி 27, வருகிற ஞாயிறு காலை எட்டு மணிக்கு 34வது உலக இளையோர் நாளின் நிறைவுத் திருப்பலியை நிறைவேற்றி, அன்று மாலை 6.15 மணிக்கு உரோம் நகர் புறப்படுவார் திருத்தந்தை பிரான்சிஸ். அப்போது இந்திய நேரம்., சனவரி 28 திங்கள் காலை 4 மணி 45 நிமிடமாக இருக்கும்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பானமாவில் மேற்கொள்ளும் இத்திருத்தூதுப்பயணம், அவரின் 26வது வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணமாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 January 2019, 15:00