தேடுதல்

திருவிவிலியம் திருவிவிலியம் 

"நட்பின் விவிலியம்" என்ற நூலுக்கு திருத்தந்தையின் அணிந்துரை

யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே நிலவிவந்துள்ள உறவு முறிவுகளை சரி செய்யவும், மன்னிப்பு கேட்கவும் நாம் கடினமாக உழைக்கவேண்டும் – திருத்தந்தையின் அணிந்துரை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நட்பின் விவிலியம் என்ற நூல், தன் அழகால் நம்மைக் கவரும் அதே வேளை, நமக்கு சவாலாகவும் அமைந்துள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு புதிய நூலுக்கு எழுதியுள்ள அணிந்துரையில் கூறியுள்ளார்.

'நட்பின் விவிலியம் - யூதர்களும் கிறிஸ்தவர்களும் Torah / Pentateuch நூலைக் குறித்த கருத்து" என்ற தலைப்பில், வெளியாகவிருக்கும் ஒரு நூலுக்கு திருத்தந்தை வழங்கியுள்ள அணிந்துரையில், இந்நூலின் அழகையும், இது வழங்கும் சவாலையும் குறித்து பேசியுள்ளார்.

எதிர்ப்பிலிருந்து, உரையாடலுக்கு...

கடந்த 19 நூற்றாண்டுகளாக யூத எதிர்ப்பு என்ற நிலையில் வாழ்ந்து வந்த கிறிஸ்தவ உலகம், கடந்த சில ஆண்டுகளாக மட்டுமே, யூதர்களுடன் மேற்கொள்ளக்கூடிய உரையாடலைக் குறித்து சிந்தித்து வந்துள்ளது என்று இந்த அணிந்துரையின் துவக்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே நிலவிவந்துள்ள உறவு முறிவுகளை சரி செய்யவும், மன்னிப்பு கேட்கவும் நாம் கடினமாக உழைக்கவேண்டும் என்று, திருத்தந்தை, இந்த அணிந்துரையில் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆக்கப்பூர்வமான உரையாடல் இடம்பெறவேண்டும்

யூதம், கிறிஸ்தவம் இரண்டிலும் உள்ள உன்னத விழுமியங்கள் விவிலியத்தில் கூறப்பட்டுள்ளன என்றும், இந்த விழுமியங்களைப் புரிந்துகொள்ள இவ்விரு மதங்களுக்கிடையிலும் ஆக்கப்பூர்வமான உரையாடல் இடம்பெறவேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்துள்ளார்.

எபிரேய விவிலியத்தில் பொதிந்துள்ள கருத்து செறிவு மிக்க இறைவாக்கியங்களை யூதரும், கிறிஸ்தவரும் இணைந்து வாசித்து, பொருள் தேடுவது, நம் உரையாடலுக்கு பெரிதும் உதவும் என்று, தன் அணிந்துரையில் வலியுறுத்திக் கூறியுள்ளார் திருத்தந்தை.

இத்தாலிய ஆயர்கள் பேரவையின் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள "நட்பின் விவிலியம்" என்ற நூல், யூத, கிறிஸ்தவ அறிஞர்களின் கருத்துக்களைத் தாங்கி வருகிறது என்பதும், இந்நூல், கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் முதல் நாளான, சனவரி 18, இவ்வெள்ளியன்று வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 January 2019, 15:10