Bose கிறிஸ்தவ ஒன்றிப்பு குழுத் தலைவர் சந்திப்பு
மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்
“சிறுகுழந்தைகளின் பண்பைக் கொண்டிருப்பது சுதந்திரமாகும். நற்செய்தியின்படி, மிகச்சிறியவராய் இருப்பவர், தடைகளின்றி இருப்பவர். மேலும், தன்னை விளம்பரப்படுத்த வேண்டும் என்ற எவ்வித உந்துதலிலிருந்தும், வெற்றிக்கு எவ்வித உரிமைகோர்வதிலிருந்தும், விடுதலை பெற்றவராயும் அவர் இருப்பார் என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியில், சனவரி 12, இச்சனிக்கிழமையன்று இடம்பெற்றிருந்தன.
மேலும், இச்சனிக்கிழமை காலையில், Bose கிறிஸ்தவ ஒன்றிப்பு குழுவை உருவாக்கிய என்சோ பியாங்கி (Enzo Bianchi) அவர்களையும், இத்தாலிய தேசிய பேக்ஸ் கிறிஸ்டி அமைப்பின் ஆலோசகர்கள் இருபது பேரையும் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்னும், Helmet திருக்குடும்ப சகோதரிகள் சபை அதிபர் அருள்சகோதரி Emerence Nzigire Mwambusa அவர்களையும், ஆயர்கள் பேராயத் தலைவர் கர்தினால் Marc Ouellet, திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் ஆகியோரையும் திருத்தந்தை, இச்சனிக்கிழமை காலையில் சந்தித்தார்.
இத்தாலியின் Monferrato என்ற ஊரில், 1943ம் ஆண்டு பிறந்த என்சோ பியாங்கி அவர்கள், தூரின் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறையில் பட்டயம் பெற்றபின்னர், 1965ம் ஆண்டில், Bose என்ற சிறிய கிராமத்தில் குடியேறினார். 1968ம் ஆண்டில் ஆழ்நிலை தியான துறவற குழுமம் ஒன்றை Bose கிராமத்தில் ஆரம்பித்தார். அக்குழுமத்தின் தலைவராகப் பணியாற்றும் இவர், திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவையில் ஆலோசகராக உள்ளார். Bose கிறிஸ்தவ ஒன்றிப்பு குழுவுக்கு, திருப்புகழ்மாலை செபிப்பது, உடல் உழைப்பு, விவிலியம் வாசிப்பது ஆகிய மூன்றும் முக்கியமானவை.
இன்னும், ஆண்டவரின் திருமுழுக்கு விழாவான சனவரி 13, இஞ்ஞாயிறு காலை 9.30 மணிக்கு, வத்திக்கான் சிஸ்டைன் சிற்றாலயத்தில், திருப்பலி நிறைவேற்றி, குழந்தைகளுக்குத் திருமுழுக்கு அளிப்பார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்