சான்றுகள் வழங்கும் நற்பணிகளில் திருஅவை வளர்கின்றது
மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்
இரக்கமும், பிறரன்பும் நிறைந்த நற்சான்று வாழ்வை வலியுறுத்தி வருகின்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 05, இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டரில், திருஅவை எவ்வாறு வளர்கின்றது என்பதை குறிப்பிட்டுள்ளார்.
“அமைதியிலும், செபத்திலும், சான்றுகள் வழங்கும் நற்பணிகளிலும் திருஅவை வளர்கின்றது” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருத்தந்தையின் நிகழ்வுகள்
மேலும், சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பை ஆரம்பித்த பேராசிரியர் அந்த்ரேயா ரிக்கார்தி அவர்களையும், U.I.S.G எனப்படும், பெண் துறவற சபைகள் அதிபர்களின் உலகளாவிய கூட்டமைப்பின் தலைவரும், ஆப்ரிக்க அன்னையின் மறைபோதகர்கள் சபையின் (வெள்ளை அருள்சகோதரிகள்) தலைவருமான அருள்சகோதரி Carmen Sammut அவர்களையும், இத்தாலியின் அவெஸ்ஸானோ ஆயர் பியெத்ரோ சந்த்தோரோ அவர்களையும், இத்தாலியின் சான் செவேரோவின் முன்னாள் ஆயர் லூசியோ ஆஞ்சலோ ரென்னா அவர்களையும், சனவரி 05, இச்சனிக்கிழமை காலையில், தனித்தனியே சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்திற்குப் பின்னர், உரோம் நகரில், பேராசிரியர் அந்த்ரேயா ரிக்கார்தி அவர்களால் 1968ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பு, எழுபதுக்கும் அதிகமான நாடுகளில் பிறரன்பு பணியாற்றி வருகின்றது. தன்னார்வல அமைப்பான இது, சமுதாயத்தில் விளிம்புநிலையில் உள்ள, எல்லா வயதுடைய மக்களுக்கும் உதவி வருகின்றது. செபம், ஏழைகள் மற்றும் அமைதி ஆகியவை, இந்த அமைப்பின் குறிக்கோள்களாகும். இந்த அமைப்பு, ஒவ்வொரு நாளும், ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்