திருத்தந்தை - நைரோபி வன்முறை, அறிவற்ற செயல்
மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்
கென்யா நாட்டுத் தலைநகர் நைரோபியில், நட்சத்திர பயணியர் வளாகம் ஒன்று தாக்கப்பட்டதற்கு, தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
அதேநேரம், அனைத்து கென்ய மக்களுக்கும், குறிப்பாக, இத்தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ள திருத்தந்தை, இறந்தவர்களின் ஆன்மா நிறை சாந்தியடைய செபிப்பதாகவும் கூறியுள்ளார்.
திருத்தந்தையின் இந்த அனுதாபத் தந்திச் செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரால் அனுப்பியுள்ளார். சனவரி 15, இச்செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட இத்தாக்குதலில், குறைந்தது 21 பேர் இறந்துள்ளனர்.
நைரோபி நகரிலுள்ள, DusitD2 பயணியர் வளாகத்தில் நடத்தப்பட்டுள்ள இந்தப் பயங்கவாத தாக்குதல், அறிவற்ற செயல் என்றும், அத்தந்திச் செய்தியில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகம், எருசலேம் நகருக்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தே, நைரோபி பயணியர் வளாகத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதாக, அல்-கொய்தாவுடன் தொடர்புடைய அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது என, செய்திகள் கூறுகின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்