திருத்தந்தை, எத்தியோப்பிய பிரதமர் சந்திப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்
எத்தியோப்பிய சனநாயக குடியரசின் பிரதமர் Abiy Ahmed Ali அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, சனவரி 21, இத்திங்கள் மாலை திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பு பற்றி திருப்பீட செய்தி தொடர்பகம் வெளியிட்ட தகவலில், எத்தியோப்பியாவில் தேசிய ஒப்புரவையும், ஒருங்கிணைந்த வளர்ச்சியையும் ஊக்குவிப்பதற்கு எடுக்கப்பட்டுவரும் முக்கிய முயற்சிகள் பற்றியும், எத்தியோப்பிய வரலாற்றில், கிறிஸ்தவர்களின் பங்கு குறித்தும், திருத்தந்தையும், எத்தியோப்பிய பிரதமரும், இனிதே கலந்துரையாடினர் என கூறப்பட்டுள்ளது.
ஆப்ரிக்காவில் சமூக-பொருளாதார வளர்ச்சி, போர்களுக்கு அமைதியான தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் உட்பட, கிழக்கு ஐரோப்பாவின் நிலை, ஆப்ரிக்காவின் கொம்பு பகுதியில் உறுதியான தன்மையைக் கொணர எத்தியோப்பியாவின் அர்ப்பணம், எரிட்ரியாவோடு அண்மையில் இடம்பெற்ற தூதரக உறவுகள் போன்றவை பற்றிய உரையாடல்களும், இச்சந்திப்பில் இடம்பெற்றன.
திருத்தந்தையைச் சந்தித்த பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் நேரடி செயலர், பேரருள்திரு Antoine Camilleri ஆகிய இருவரையும் சந்தித்துப் பேசினார், எத்தியோப்பிய பிரதமர் Abiy Ahmed Ali அவர்கள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்