தூத்துக்குடி மறைமாவட்டத்தின்  புதிய ஆயர் ஸ்டீஃபன் அன்டனி பிள்ளை தூத்துக்குடி மறைமாவட்டத்தின் புதிய ஆயர் ஸ்டீஃபன் அன்டனி பிள்ளை 

தூத்துக்குடி மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூத்துக்குடி மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி ஸ்டீஃபன் அன்டனி பிள்ளை அவர்களை நியமித்துள்ளார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தூத்துக்குடி மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவந்த ஆயர் யுவான் அம்புரோஸ் அவர்கள், தன் பணியிலிருந்து ஒய்வு பெற விரும்பி, அனுப்பிய விண்ணப்பத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுக்கொண்டு, இம்மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி ஸ்டீஃபன் அன்டனி பிள்ளை அவர்களை நியமித்துள்ளார்.

76 வயது நிறைந்த ஆயர் யுவான் அம்புரோஸ் அவர்கள், 2005ம் ஆண்டு, தன் 62வது வயதில், தூத்துக்குடி மறைமாவட்டத்தின் ஆயராக, பொறுப்பேற்று, கடந்த 14 ஆண்டுகள் தன் பணிகளை நிறைவு செய்துள்ளார்.

1952ம் ஆண்டு, ஜூன் 22ம் தேதி, கோட்டாறு மறைமாவட்டத்தின் கீழ மணக்குடி என்ற ஊரில் பிறந்த ஸ்டீஃபன் அன்டனி பிள்ளை அவர்கள், 1979ம் ஆண்டு, மே 7ம் தேதி, வேலூர் மறைமாவட்டத்தின் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

1986ம் ஆண்டு முதல், 89ம் ஆண்டு முடிய, உரோம் நகரின் உர்பானியா பல்கலைக் கழகத்தில் விவிலிய இறையியலில் முனைவர் பட்டப்படிப்பை நிறைவு செய்த அருள்பணி அன்டனி பிள்ளை அவர்கள், 1990ம் ஆண்டு முதல் 6 ஆண்டுகள், கரீபியன் பகுதியில், குவாதலூப் தீவில் மறைபணியாளாராக உழைத்தார்.

பங்கு அருள்பணியாளராகவும், இறையியல் பேராசிரியராகவும், பணியாற்றிவந்த அருள்பணி அன்டனி பிள்ளை அவர்கள், வேலூர் மறைமாவட்ட பேராலயத்தின் பங்கு அருள்பணியாளராகவும், அம்மறைமாவட்டத்தின் முதன்மை அருள்பணியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 January 2019, 14:46