வத்திக்கான் நகருக்கு பாதுகாப்பு வழங்கும் காவல் துறையின் உயர் அதிகாரிகளுடன் திருத்தந்தை வத்திக்கான் நகருக்கு பாதுகாப்பு வழங்கும் காவல் துறையின் உயர் அதிகாரிகளுடன் திருத்தந்தை 

வத்திக்கான் காவல்துறையினரை வாழ்த்திய திருத்தந்தை

பகலா, இரவோ, மழையோ, வெயிலோ, குளிரோ எந்தச் சூழலிலும், வத்திக்கான் நகருக்கு தவறாமல் வந்து, மக்களுக்கு உதவும் காவல் துறையினருக்கு, தன் மனமார்ந்த நன்றியைக் கூறினார், திருத்தந்தை.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வத்திக்கான் நகருக்கு பாதுகாப்பு வழங்கும் காவல் துறையின் உயர் அதிகாரிகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 17, இவ்வியாழன் காலையில் சந்தித்து, அவர்கள் ஆற்றிவரும் பணிகளுக்கு தன் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

ஒவ்வோர் ஆண்டும் காவல் துறையினரைச் சந்திப்பது, தனக்குக் கிடைக்கும் மகிழ்வான வாய்ப்பு என்றும், இத்துறையைச் சார்ந்த அனைவருக்கும், புத்தாண்டு முழுவதும், மனிதமும், கிறிஸ்தவமும் மிகுந்த நன்மைகள் கிடைக்கவேண்டும் என்றும் திருத்தந்தை தன் வாழ்த்துரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.

மனிதரால் எண்ணிப்பார்க்க இயலாத அளவு இறைவன் நம்மை நெருங்கி வந்துள்ளார் என்பதை, நாம் அண்மையில் கொண்டாடி முடித்த கிறிஸ்து பிறப்பு, மற்றும் திருக்காட்சி திருவிழாக்கள், நமக்குச் சொல்லித் தருகின்றன என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த நெருக்கத்தை நம் அயலவருடன், குறிப்பாக, சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோருடன் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதையும், இத்திருவிழா காலம் நமக்குச் சொல்லித்தருகிறது என்று கூறினார்.

இத்திருவிழா காலத்தில், இறைவனை நெருங்கிவரும் நோக்கத்தில், திருப்பயணிகள் வத்திக்கானையும், புனித பேதுரு பசிலிக்காவையும் தேடி வந்தபோது, அவர்களுக்குப் பெரும் உதவியாக இருந்த காவல் துறையினர் ஒவ்வொருவரையும் தான் பாராட்டுவதாக திருத்தந்தை எடுத்துரைத்தார்.

பகலா, இரவோ, மழையோ, வெயிலோ, குளிரோ எந்தச் சூழலிலும், வத்திக்கான் நகருக்கு தவறாமல் வந்து, மக்களுக்கு உதவும் காவல் துறையினருக்கு, தன் மனமார்ந்த நன்றியைக் கூறினார், திருத்தந்தை.

காவல் துறையினர் அனைவரையும் அவர்களது குடும்பத்தினரையும் அன்னை மரியாவின் பாதுகாப்பில் தான் ஒப்படைத்து, ஆசீர் வழங்குவதாகக் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்கள் அனைவரும் தனக்காக செபிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 January 2019, 15:00