அபு தாபி திருத்தூதுப் பயணத்தின் இலச்சனை அபு தாபி திருத்தூதுப் பயணத்தின் இலச்சனை 

அபு தாபியில் திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2019ம் ஆண்டு, பிப்ரவரி 3ம் தேதி முதல் 5ம் தேதி முடிய, ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரான, அபு தாபியில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2019ம் ஆண்டு, பிப்ரவரி 3ம் தேதி முதல் 5ம் தேதி முடிய, ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரான, அபு தாபியில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் என்று, திருப்பீட செய்தித் தொடர்பகத் தலைவர், கிரேக் புர்கே அவர்கள், டிசம்பர் 6, இவ்வியாழனன்று அறிவித்தார்.

இளவரசர், Sheikh Mohammed bin Zayed Al Nahyan அவர்களின் அழைப்பையும், ஐக்கிய அரபு அமீரகத்தின் கத்தோலிக்கத் திருஅவையின் அழைப்பையும் ஏற்று, திருத்தந்தை இப்பயணத்தை மேற்கொள்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம், அபு தாபியில் நடைபெறும் பன்னாட்டு பலசமயக் கூட்டத்தில் கலந்துகொள்வது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்தின் முக்கிய நிகழ்வாக அமையும்.

திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் இத்திருத்தூதுப் பயணத்தின் இலச்சனையும், இப்பயணத்தின் மையக்கருத்தும், கிரேக் அவர்களால் இவ்வியாழனன்று வெளியிடப்பட்டது.

அமைதியைக் குறிக்கும் புறா ஒன்று, தன் அலகில் ஒலிவக் கிளையொன்றைத் தாங்கியிருப்பது போலவும், அதன் இறக்கைகள், ஐக்கிய அரபு அமீரகத்தின் வண்ணங்கள் கொண்டிருப்பது போலவும், இப்பயணத்தின் இலச்சனை வடிவமைக்கப்பட்டுள்ளது.

அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்கள், அமைதி வேண்டி உருவாக்கிய புகழ்பெற்ற செபத்தின் ஒரு வரியான, "உமது அமைதியின் கருவியாக என்னை உருவாக்கும்" என்ற சொற்கள், இப்பயணத்தின் மையக்கருத்தாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 December 2018, 15:25