தேடுதல்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் 41வது அரசுத்தலைவரான ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் அவர்களின் சவப்பெட்டி அமெரிக்க ஐக்கிய நாட்டின் 41வது அரசுத்தலைவரான ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் அவர்களின் சவப்பெட்டி 

மரணமடைந்த அரசுத்தலைவர் புஷ் – திருத்தந்தையின் இரங்கல்

எல்லாம் வல்ல இறைவனின் இரக்கத்தில் அரசுத்தலைவர் ஜார்ஜ் புஷ் அவர்களின் ஆன்மாவை ஒப்படைத்து, தான் செபிப்பதாக, திருத்தந்தை தந்திச்செய்தி அனுப்பினார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நவம்பர் 30, கடந்த வெள்ளியன்று மரணமடைந்த அமெரிக்க ஐக்கிய நாட்டின் முன்னாள் அரசுத்தலைவர் ஜார்ஜ் புஷ் அவர்களின் மறைவைக் குறித்து, தன் ஆழந்த வருத்தங்களை வெளியிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு தந்திச் செய்தியை அனுப்பியுள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் டேனியல் டினார்டோ அவர்களுக்கு, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரால், இந்த தந்திச் செய்தியை அனுப்பியுள்ளார்.

முன்னாள் அரசுத்தலைவர் ஜார்ஜ் H.W. புஷ் அவர்களின் மறைவைக் குறித்து அறிந்து, தான் வருத்தம் அடைவதாகவும், புஷ் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும், தன் ஆழந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும் இந்த தந்திச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

எல்லாம் வல்ல இறைவனின் இரக்கத்தில் புஷ் அவர்களின் ஆன்மாவை ஒப்படைத்து தான் செபிப்பதாகவும், அவரது பிரிவால் துயருறும் அனைவருக்கும், இறைவன், அமைதியையும், நம்பிக்கையையும் வழங்க வேண்டுமென்றும், இத்தந்திச் செய்தியில், திருத்தந்தை கூறியுள்ளார்.

மேலும், "மீட்பு தேவை என்ற உணர்வே, நம்பிக்கையின் துவக்கம்: இந்த வழியே, இயேசுவைச் சந்திக்க நம்மை தயாரிக்கிறது" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக டிசம்பர் 5, இப்புதனன்று வெளியாயின.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 December 2018, 15:16